Published : 10 Aug 2020 09:55 PM
Last Updated : 10 Aug 2020 09:55 PM

குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1,20,000 கோடி நிவாரணத் தொகை: நிதின் கட்கரி தகவல்

மத்திய அரசு அறிவித்த ரூ 3 லட்சம் கோடி நிவாரணத் தொகையில், 1,20,000 கோடி ரூபாய் குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

இன்று கர்நாடக மாநில கவுன்சில் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அறைகளின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கான (MSME) உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில் உரையாற்றிய போது இதை தெரிவித்தார்.

அனைத்து தரப்பினரிடமிருந்தும், அனைத்து வகையான அச்சத்தையும், எதிர்மறை சிந்தனைகளையும் நீக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார், மேலும் நாட்டை ஒரு உன்னதப் பொருளாதார சக்தியுள்ள நாடாக மாற்ற அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக அவர் உறுதியளித்தார்.

கட்கரி மேலும் கூறுகையில், அறிவிக்கப்பட்ட ரூ 3 லட்சம் கோடி நிவாரணத் தொகையில், 1,20,000 கோடி ரூபாய் குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கு (MSME) வழங்கப்பட்டுள்ளது என்றார்.

தாமதமாகப் பணம் செலுத்துவதில் இருக்கும் சிக்கல் குறித்து விவாதித்த அவர், குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கும் நிலுவையில் உள்ள பில்களை 45 நாட்களுக்குள் அளிக்க அனைத்து அமைச்சகங்கள், துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

அனைத்து முதல்வர்களும் தங்கள் மாநில, யூனியன் பிரதேச அமைச்சகங்கள், துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கான (MSME) நிலுவைத் தொகையை தீர்ப்பதற்கான வழிமுறைகளை வெளியிடுமாறு அவர் கேட்டுக்கொண்டார். மேலும், சமதன் இணைய தளத்தில் அளிக்கப்பட்ட புகார்களையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர் இணையக் கருத்தரங்கில் பங்கேற்றவர்களிடம், ஒரு நிலவங்கி மற்றும் சமூக சிறு நிதி நிறுவனம் என்ற யோசனையை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம், இது தொழில்முனைவோர் மற்றும் சிறு கடைகள் மற்றும் வணிகங்களை நடத்த விரும்பும் நபர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்ற தகவலையும் தெரிவித்தார்.

பிரதமரின் தொலைநோக்குத் திட்டமான “சுயசார்பு பாரத் இயக்கம்” பற்றி விவாதித்த போது, குறிப்பாக 115 சிறப்பு மாவட்டங்களில் கைத்தறி, கைவினைப்பொருள்கள், காதித் தொழில்கள் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

வேளாண், கிராமப்புற மற்றும் பழங்குடியினர் துறையினருக்கான சிறப்புக் கொள்கைகளை நாம் திட்டமிட வேண்டும், ஏனெனில் அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திறன் உள்ளது எனவும் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x