Published : 08 Aug 2020 04:22 PM
Last Updated : 08 Aug 2020 04:22 PM

ரூ. 1 லட்சம் கோடி வேளாண் உள்கட்டமைப்பு நிதித் திட்டம்: பிரதமர் மோடி நாளை வெளியீடு

வேளாண் உள்கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ், 1 லட்சம் கோடி ரூபாய்க்கான நிதித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நாளை வெளியிடுகிறார்.

மேலும் பிரதமர், ஆறாவது தவணையாக 17,000 கோடி ரூபாய் நிதியை 8.5 கோடி விவசாயிகளுக்கு PM-KISAN திட்டத்தின் கீழ் வெளியிடுகிறார், இந்நிகழ்ச்சி நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் மக்களின் முன்னிலையில் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரும் கலந்து கொள்கிறார்.

மத்திய துறையின், “வேளாண் உள்கட்டமைப்பு நிதி” திட்டத்தின் கீழ் ரூ. 1 லட்சம் கோடி நிதி உதவித் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது. அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை உள்கட்டமைப்பு மற்றும் குளிர் சாதன சேமிப்பு மையங்கள், சேகரிப்பு மையங்கள், செயலாக்க அலகுகள் போன்ற சமூக விவசாய சொத்துக்களை உருவாக்குவதற்கு இந்த நிதி ஊக்கமளிக்கும். இந்தச் சொத்துக்கள் விவசாயிகள் தங்கள் விளைபொருள்களுக்கு அதிக மதிப்பைப் பெற உதவும்.

ஏனெனில் அவர்கள் தங்கள் பொருள்களை அதிக அளவில் சேமித்து வைப்பதன் மூலம் பொருள்கள் வீணாவதைக் குறைக்கவும், செயலாக்கம் மற்றும் மதிப்புக் கூட்டல் ஆகியவற்றை அதிகரிக்கவும் முடியும். ரூ 1 லட்சம் கோடி நிதி வசதி, பல கடன் வழங்கும் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து நிதிதிட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படும்; 12 பொதுத்துறை வங்கிகளில் 11 வங்கிகள் வேளாண்மை, ஒத்துழைப்பு மற்றும் விவசாயிகள் நலத்துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஏற்கனவே கையெழுத்திட்டுள்ளன.

இந்தத் திட்டங்களின் நம்பகத்தன்மையை அதிகரிக்க 3 சதவீத வட்டிக் குறைப்பு மற்றும் ரூ .2 கோடி வரை கடன் உத்தரவாதம் பயனாளிகளுக்கு வழங்கப்படும். இத்திட்டத்தின் பயனாளிகளில் விவசாயிகள், முதன்மை வேளாண் கடன் சங்கம் (PACS), சந்தைப்படுத்தல் கூட்டுறவு சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (FPOs) சுய உதவிக்குழுக்கள் (SHGs), கூட்டுப் பொறுப்புக் குழுக்கள் (JLGs), பல்நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள், வேளாண் தொழில் முனைவோர், தொடக்க நிறுவனங்கள் மற்றும் மத்திய, மாநில நிறுவனம் அல்லது உள்ளூர் ஆதரவு பெற்ற பொது-தனியார் கூட்டு நிதியுதவித் திட்டங்கள் ஆகியவை அடங்கும்.

01 டிசம்பர் 2018 அன்று தொடங்கப்பட்ட பிரதம மந்திரியின் கிசான் சம்மன் நிதி யோஜ்னா (PM - KISAN) திட்டம் 9.9 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு 75,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நேரடியாக பணமாக வழங்கியுள்ளது. இது அவர்களின் விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், அவர்களது குடும்பங்களை ஆதரிப்பதற்கும் உதவியது.

பண உதவி நேரடியாக விவசாயிகளுக்குச் செல்லாமல் இருப்பதைத் தடுப்பதற்கும், விவசாயிகளுக்கு நிதி உதவியில் பலன் நேரடியாக கிடைப்பதற்கும், ஆதார் அங்கீகரிக்கப்பட்ட பயனாளிகளின் வங்கிக்கணக்கில் பணம் மாற்றப்படுவதால், பி.எம்-கிசான் திட்டத்தின் கீழ் செயல்படுத்துதல் இணையற்ற வேகத்தில் நடந்துள்ளது. கோவிட்-19 தொற்றுநோய்களின் போது விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதில் இந்தத் திட்டம் பேருதவியாக இருந்ததுடன், ஊரடங்கு காலத்தில் விவசாயிகளுக்கு உதவுவதற்காக கிட்டத்தட்ட 22,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x