Published : 29 Jul 2020 08:59 AM
Last Updated : 29 Jul 2020 08:59 AM
பாஜக எம்.பி. ஜெயந்த் சின்ஹா தலைமையிலான நாடாளுமன்ற நிதி நிலைக்குழுவிடம் மத்திய நிதி செயலாளர் அஜய் பூஷண் பாண்டே தற்போதைய வருவாய்ப் பகிர்வு முறைகளின் படி மாநிலங்களுக்குச் சேர வேண்டிய ஜிஎஸ்டி தொகையை அளிக்கும் நிலையில் மத்திய அரசு இல்லை என்று தெரிவித்ததாக அரசுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக செவ்வாயன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட 2 உறுப்பினர்கள் கூறும் தகவல்களின்படி கரோனா பெருந்தொற்று காரணமாக வருவாய் சரிவினால் மாநிலங்களுக்குச் சேர வேண்டிய ஜிஎஸ்டி பங்கை மத்திய அரசினால் கொடுக்கமுடியவில்லை என்றார். மேலும், மாநில அரசுகளுக்கு அளிக்கும் இழப்பீடு குறித்து மறு அமைவு செய்திட ஜிஎஸ்டி சட்டத்தில் இடமிருக்கிறது என்றும், அதாவது வருவாய் ஒரு மட்டத்துக்குக் கீழ் சென்று விட்டால் மாநிலங்களுக்கு எப்படி பகிர்ந்தளிப்பது என்பதை மறு வரையறை செய்ய முடியும் என்று நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
திங்களன்று நிதியமைச்சகம் மாநிலங்களுக்கான கடைசி ஜிஎஸ்டி இழப்பீடு தவணையான ரூ.13,806 கோடியை ரிலீஸ் செய்ததாக தெரிவித்தது.
ஜூலை மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் கூடி மாநிலங்களுக்கு இழப்பீடு அளிக்கும் வழிமுறையை விவாதித்திருக்க வேண்டும், ஆனால் இந்தக் கூட்டம் நடைபெறவில்லை.
கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு முதல் முறையாகக் கூடிய நாடாளுமன்ற நிதி நிலைக்குழு கூட்டம் இந்தியப் பொருளாதாரத்தின் நிலைமைகளை விவாதிக்காமல் ‘சூழலியல் புதுமைகளுக்கு நிதியளித்தல் மற்றும் இந்தியாவின் வளர்ச்சி நிறுவனங்கள்’ என்பதை விவாதித்ததற்காக எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியை விமர்சித்துள்ளன.
காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி, கடந்த பட்ஜெட்டே கூட தவறானதுதான் ஏனெனில் அது கரோனாவுக்கு முந்தைய நிலமைகளை வைத்து போடப்பட்ட பட்ஜெட். மொத்தமான வருவாய் இழப்பு குறித்து மத்திய அரசிடம் எந்த ஒரு தெளிவும் இல்லை என்று கூறியுள்ளார். காங்கிரஸ் எம்.பி.கவுரவ் கோகய் அரசின் பொருளாதார மீட்புத் திட்டத்தின் திறனை மீண்டும் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
கமிட்டியின் பாஜக தலைவர் சின்ஹா, எதிர்க்கட்சிகளின் அடிப்படைக் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அது அரசியல்தனமாக உள்ளது என்று நழுவிவிட்டார். இது தொடர்பாக பிரபுல் படேல் கூறும்போது நாடாளுமன்ற நிலைக்குழு பொருளாதாரம் குறித்த அடிப்படை கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியவில்லை எனில் எதற்கு அந்தக் குழு பேசாமல் கலைத்து விடுங்கள் என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT