Published : 25 Jul 2020 01:19 PM
Last Updated : 25 Jul 2020 01:19 PM

தபால் துறை சிறுசேமிப்புத் திட்டங்கள்: கிளை அஞ்சலகங்களிலும் இனி பெறலாம்

தபால் துறையின் அனைத்து சிறுசேமிப்புத் திட்டங்களும் கிளை அஞ்சலகங்கள் வரையில் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறப் பகுதிகளிலும் தபால்துறை செயல்பாடுகளை அளித்து, சேவைகளைப் பலப்படுத்தும் நோக்கிலும், பெரும்பான்மையாக உள்ள கிராமங்களிலும் சிறுசேமிப்புத் திட்டத்தின் வசதிகளை அளிக்கும் வகையிலும், அனைத்து சிறுசேமிப்புத் திட்டங்களையும் கிளை அஞ்சலகங்கள் வரையில் தபால் துறை இப்போது விஸ்தரிப்பு செய்துள்ளது.

கிராமப் பகுதிகளில் 1,31,113 கிளை அஞ்சலகங்கள் உள்ளன. தபால் சேவைகள், விரைவு அஞ்சல்கள், பார்சல்கள், மின்னணு மணியார்டர், கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு போன்ற சேவைகளுடன், இந்தக் கிளை அஞ்சலகங்கள் சேமிப்புக் கணக்கு, தொடர் வைப்பு நிதி, நீண்டகால வைப்பு நிதி, சுகன்யா சம்ரித்தி கணக்கு திட்டங்கள் ஆகிய சேவைகளை இதுவரை அளித்து வருகின்றன.

புதிய உத்தரவின்படி கிளை அஞ்சலகங்கள் பி.பி.எப், மாதாந்திர வருவாய்த் திட்டம், தேசிய சேமிப்புப் பத்திரம், கே.வி.பி. மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டங்களின் சேவைகளையும் அளிக்கும். நகர்ப்புற மக்கள் தபால் நிலையங்களில் பெறக் கூடிய அனைத்து சேமிப்புத் திட்டங்களையும், கிராமப்புறங்களில் வாழும் மக்களும் இனிமேல் பெற முடியும். வரவேற்பைப் பெற்றிருக்கும் சேமிப்புத் திட்டங்களில் மக்கள் தங்கள் பணத்தை கிராமங்களிலேயே போட்டு வைத்துக் கொள்ள முடியும்.

அனைத்து தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்களையும் மக்களின் வீட்டுக்கே கொண்டு போய் சேர்த்திருப்பதன் மூலம், கிராமப்புற இந்தியாவுக்கு அதிகாரம் அளிப்பதற்கு இந்தத் துறை மேற்கொண்டுள்ள மற்றொரு முக்கியமான நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x