Published : 25 Jul 2020 01:04 PM
Last Updated : 25 Jul 2020 01:04 PM

பிரதமர் கிராமப்புற வீட்டுவசதித் திட்டம்; கால அவகாசம் குறைப்பு

புதுடெல்லி

மாற்றியமைக்கப்பட்ட பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தை நிறைவேற்றி முடிப்பதற்கான கால அவகாசம் 114 நாட்களாகக் குறைந்துள்ளது. நிலமற்ற பயனாளிகளுக்கான 1.46 லட்சம் வீடுகள் உட்பட 1.10 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

“2022-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீட்டுவசதி“ என்ற இலக்கை அடையும் நோக்குடன், பிரதமர் திரு.நரேந்திர மோடியால் 20 நவம்பர் 2016 அன்று தொடங்கப்பட்ட, மாற்றியமைக்கப்பட்ட பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் (PMAY-G), 2022-ஆம் ஆண்டுக்குள் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய 2.95 கோடி வீடுகளைக் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கான பயனாளிகள் மூன்று கட்ட சரிபார்ப்புக்குப் (2011-ஆம் ஆண்டு சமுதாய-பொருளாதார-சாதிவாரி கணக்கெடுப்பு, கிராமசபை மற்றும் புவிசார் குறியீடு) பிறகு தேர்வு செய்யப்படுவதால், பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், பரம ஏழைகள் தேர்வு செய்யப்படுவது உறுதி செய்யப்படுகிறது. பயனாளிகளின் வங்கிக் கணக்கில் திட்டத்திற்கான நிதி, சிக்கலின்றி செலுத்தப்படுவதை உறுதி செய்ய, நேரடிப் பயன் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை கிராமப்புற வளர்ச்சித்துறை மேற்கொண்டு வருகிறது.

உள்ளூர்க் கட்டுமானக் கலையை ஆய்வு செய்த பிறகு, வீடு கட்டுவதில் புதிய வடிவமைப்புகளைப் பின்பற்றுதல், கட்டுமானத்தின் நிர்ணயிக்கப்பட்ட ஒவ்வொரு கட்டத்திலும், ஆதாரம் அடிப்படையிலான புவிசார் குறியீடு மூலம் கண்காணித்தல், பரிவர்த்தனை அடிப்படையிலான மேலாண்மைத் தகவல் முறை, போதுமான நிதிஒதுக்குதல், கிராமப்புற கொத்தனார்களுக்கு பயிற்சி அளித்தல் போன்றவற்றைப் பயன்படுத்தி குறிப்பிட்ட காலத்திற்குள் வீடுகளைக் கட்டி முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாக, கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்துவது உறுதி செய்யப்பட்டிருப்பதோடு, பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டப் பயனாளிகளான நிலமற்ற பயனாளிகள் உள்ளிட்டவர்களுக்கு 1.10 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்ட வீடுகள் கட்ட முன்பு 314 நாட்கள் தேவைப்பட்டதுடன் ஒப்பிடும் போது, கட்டுமானப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டதன் காரணமாக, தற்போது சராசரியாக 114 நாட்கள் போதுமானது என தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின் (என்.ஐ.பி.எப்.பி.) ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தவிர, இந்திரா வீட்டுவசதித் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட சுமார் 72 லட்சம் வீடுகள் உட்பட 2014ம் ஆண்டிலிருந்து இதுவரை மொத்தம் 182 லட்சம் வீடுகளின் கட்டுமானப் பணிகளை கிராமப்புற வளர்ச்சித்துறை முடித்துள்ளது.

இது தவிர, பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் மூலம், பல்வேறு அரசுத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதன் வாயிலாக குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளும் நிறைவேற்றப்படுகிறது. ஏழை மக்களுக்கு வீடு கிடைப்பதோடு மட்டுமின்றி, மகாத்மாக காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், 90-95 நாட்களக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கிறது.

மேலும், மின்துறையால் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் வாயிலாக, அவர்களது வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்கப்படுவதோடு, பிரதமரின் உஜ்வாலா திட்டத்தில் சமையல் எரிவாயு இணைப்பு, தூய்மை இந்தியா திட்டம்/மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் நவீன கழிப்பறை வசதிகளோடு, ஜல்ஜீவன் இயக்கத்தின் வாயிலாக குடிநீர் குழாய் இணைப்புகளும் வழங்கப்படுகிறது. தீன்தயாள் அந்தியோதயா திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 1.82 கோடி கிராமப்புறக் குடும்பங்களுக்கு மேம்பட்ட வாழ்வாதாரம் மற்றும் பல்வகைப்படுத்தல் வாய்ப்புகளை வழங்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன், பல்வேறு நிலைகளில் உள்ள வீடுகளின் கட்டுமானப் பணிகளை விரைவாக மேற்கொண்டு, 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 2.95 கோடி வீடுகளைக் கட்டி

முடிப்பது என்ற இலக்கை எட்ட முடியும் என மத்திய ஊரக வளர்ச்சித்துறை நம்பிக்கை கொண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x