Published : 13 Sep 2015 11:16 AM
Last Updated : 13 Sep 2015 11:16 AM

சீன பட்டாசுகளை விற்றால் கடும் நடவடிக்கை: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை

சீன பட்டாசுகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய தொழில், வர்த்தகத் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதா ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமஸ்கிருத விழாவில் பங்கேற் பதற்காக டெல்லியில் இருந்து நேற்று சென்னை வந்த அவர், மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

சீன நாட்டு பட்டாசுகளால் இந்தியாவில் பட்டாசுத் தொழில் பாதிக்கப்படுவதாக மத்திய அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. அதனைத் தொடர்ந்து சீன நாட்டு பட்டாசுகளை இறக்குமதி செய்யவும், பயன்படுத்தவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. சீன பட்டாசு இறக்குமதியை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்குமாறு சுங்கத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கள்ளச் சந்தையில் சீன பட்டாசுகள் விற்கப் படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த சரக்கு சேவை வரி சட்டத்தை பாஜக அரசு மெருகேற்றியுள்ளது. ஆனால், இந்த சட்டத்தை நிறைவேற்ற விடாமல் காங்கிரஸ் தடுத்து வருகிறது. நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு இந்தச் சட்டம் அவசியமானது. வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் இந்தச் சட்டத்தை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்.

சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழகத்துக்கு அதிக அளவு முதலீடுகள் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தொழில் வளர்ச்சிக்காக தமிழக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x