Published : 06 Jul 2020 08:32 PM
Last Updated : 06 Jul 2020 08:32 PM

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு அவசரகால நிதியுதவி; 750 மில்லியன் டாலர் பெற உலக வங்கியுடன் மத்திய அரசு ஒப்பந்தம் 

புதுடெல்லி

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு அவசரகால நிதியுதவித் திட்டத்திற்காக மத்திய அரசுக்கும் உலக வங்கிக்கும் இடையில் 750 மில்லியன் அமெரிக்க டாலருக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

கரோனா நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு (எம்.எஸ்.எம்.இ.கள்) அதிக நிதி கிடைக்கச் செய்வதற்காக எம்.எஸ்.எம்.இ. அவசரகால நிதியுதவித் திட்டத்திற்கு இந்திய அரசுக்கும் உலக வங்கிக்கும் இடையில் 750 மில்லியன் அமெரிக்க டாலருக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இப்போது ஏற்பட்டுள்ள அதிர்ச்சியில் தாக்குபிடித்து, மில்லியன் கணக்கான வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்க 15 லட்சம் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் ரொக்கம் மற்றும் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த நிதியுதவித் திட்டம் இருக்கும். காலப்போக்கில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்குத் தேவையான உத்வேகத்தை அளிப்பதற்கான சீர்திருத்தங்களின் விரிவான தொகுப்புகளில் முதல்கட்ட நடவடிக்கையாக இது இருக்கும்.

இந்திய அரசு சார்பில் மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலாளர் திரு சமீர்குமார் காரேவும், உலக வங்கி சார்பில் அதன் இந்தியப் பிரிவுக்கான டைரக்டர் ஜுனைத் அஹமத்தும் கையெழுத்திட்டனர்.

கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை பெரும் பாதிப்புக்கு உள்ளாகி, பெருமளவில் வாழ்வாதார இழப்பும், வேலையிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக திரு. காரே தெரிவித்தார். வங்கி சாராத நிதி நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அபரிமிதமான நிதி கிடைப்பதை உறுதி செய்வதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. வங்கி சாராத நிதி நிறுவனங்களுக்கு நிதி அளிப்பதன் மூலம் பொருளாதார வாய்ப்பு தொடர்ந்து நீடிக்கும். இயங்குவதற்கான சாத்தியக்கூறு உள்ள குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நெருக்கடி காலத்தைக் கடந்து செயல்பட உதவும் வகையில் வங்கி சாராத நிதி நிறுவனங்களும், வங்கிகளும் தொடர்ந்து நிதியுதவி அளிப்பதை ஊக்குவிப்பதற்கு அரசு உத்தரவாதம் அளிக்கும் வகையில் இந்தத் திட்டம் உதவிகரமாக இருக்கும்.

உலக வங்கியின் குழுமம், அதன் தனியார் துறை பிரிவு உள்ளிட்டவை - சர்வதேச நிதி கார்ப்பரேசன் (ஐ.எப்.சி.) ஆகியவை பின்வரும் வகையில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களைப் பாதுகாக்க அரசின் முன்முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கும்:

· ரொக்கம் கிடைக்கும் தடைகளை நீக்குதல்

· வங்கிசாராத நிதி நிறுவனங்கள் மற்றும் சிறுநிதி வங்கிகளைப் பலப்படுத்துதல்

· நிதியளிப்பில் புதுமை அணுகுமுறைகளை உருவாக்குதல்

இன்றைய காலக்கட்டத்தில் 8 சதவீத குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மட்டுமே முறைசார்ந்த கடன் வசதிகளைப் பெற்றுள்ளன. இந்தத் திட்டமானது குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனக் கடனளிப்பு மற்றும் பட்டுவாடாக்களில் நுண்தொழில்நுட்பம் மற்றும் மின்னணு நிதிச் சேவைகளின் பயன்பாட்டை பிரதானப்படுத்தி, ஊக்குவிப்பதாக இருக்கும். கடன் தரும் நிறுவனங்கள், பொருள் வழங்குநர்கள், வாங்குபவர்கள் நிறுவனங்களை விரைவாக அணுகி, குறைந்த விலையில், குறிப்பாக முறைப்படியான கடன் வசதிகளை இப்போது பெற முடியாதிருக்கும் சிறு தொழில் நிறுவனங்களை அணுகுவதில் மின்னணு தளங்கள் முக்கிய பங்காற்றும்.

--------------

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x