Published : 03 Jul 2020 07:47 PM
Last Updated : 03 Jul 2020 07:47 PM

கரோனா ஊரடங்கிலும் பாதிக்காத விவசாயப் பணிகள்: ஏப்ரல் - ஜூன் மாதத்தில் உர விற்பனை 82.81 சதவீதம் அதிகம்

கரோனா காரணமாக தேசிய அளவில் ஊரடங்கு அமலில் இருந்த போதிலும் கூட வேதிப்பொருள்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் உரங்கள் துறையானது விவசாயிகளுக்கு உரங்களை சாதனை அளவில் விற்பனை செய்துள்ளது.

ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையில் விவசாயிகளுக்கு விற்கப்பட்ட உரத்தின் அளவு 111.61 லட்சம் மெட்ரிக் டன் ஆகும். இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் விற்பனையான உரங்களின் அளவான 61.05 லட்சம் மெட்ரிக் டன்னோடு ஒப்பிட 82.81 சதவிகிதம் அதிகமாகும்.

இந்தக் காலகட்டத்தில் 64.82 லட்சம் மெட்ரிக் டன் யூரியா (கடந்த ஆண்டோடு ஒப்பிட 67 சதவீதம் அதிகம் ஆகும்), 22.46 லட்சம் மெட்ரிக் டன் டை-அமோனியம் பாஸ்பேட் (கடந்த ஆண்டோடு ஒப்பிட 100 சதவீதம் அதிகம் ஆகும்) மற்றும் 24.32 லட்சம் மெட்ரிக் டன் கலப்புரங்கள் (கடந்த ஆண்டோடு ஒப்பிட 120 சதவீதம்அதிகம் ஆகும்) ஆகியன விவசாயிகளுக்கு விற்கப்பட்டுள்ளன.

கரோனா காரணமாக தேசிய அளவில் ஊரடங்கு அமலில் இருந்த போது நடமாட்டத்திற்கும், வாகனப் போக்குவரத்திற்கும் பலவிதமான கட்டுப்பாடுகள் இருந்த சூழலிலும் உரங்கள் துறை, ரயில்வே அமைச்சகம், மாநில அரசுகள் மற்றும் துறைமுகங்களின் தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் நாட்டில் உர உற்பத்தியும், விநியோகமும் தடையில்லாமல் நடைபெற்றன.

வரவிருக்கும் காரீஃப் பருவத்திற்கு விவசாயிகளுக்கு உரங்கள் கிடைக்கும் என்று ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம் உறுதி அளித்திருந்தது.

மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் டி.வி.சதானந்த கௌடா, ‘‘காரீஃப் பருவத்தில் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக உரங்களின் இருப்பு மற்றும் விநியோகத்தை நாங்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். போதுமான அளவில் இருப்பில் இருக்கும் வகையில் மாநில அரசுகளுக்கு உரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன’’ என்றும் தெரிவித்தார்.

நாங்கள் மாநில வேளாண் அமைச்சர்களுடன் தொடர்பில் இருக்கிறோம், விதைப்புக் காலத்திற்கு முன்பாகவே விவசாயிகளுக்கு உரங்கள் கிடைப்பதை உறுதிசெய்யும் பொறுப்பை தனது அமைச்சகம் நிறைவேற்றி வருவதாக கௌடா மேலும் தெரிவித்தார்.

ஜூன் 30ம்- தேதி அன்று மட்டும் 73 உரச் சரக்குப்பெட்டிகள் ஆலைகள் மற்றும் துறைமுகங்களில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இது தான் ஒரு நாளில் அதிகபட்சமாக உரங்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ள சாதனை அளவாகும். ஒரு

சரக்குப்பெட்டியில் ஒரே சமயத்தில் 3,000 மெட்ரிக் டன் சுமை கொண்டு செல்லப்படும்.

அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தின் கீழ் இந்திய அரசு உரத்தொழிற்சாலைகள் நாட்டில் எந்தத் தடங்கலும் இன்றி இயங்கலாம் என்று அனுமதித்ததனால் ஊரடங்கின் பாதிப்புக்கு வேளாண்மைத்துறை ஆட்படவில்லை.

உரத்தொழிற்சாலைகள், ரெயில் நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் கோவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் எந்த விதமான சமரசமும் செய்து கொள்ளாமல் உர மூட்டைகளை ஏற்றி, இறக்கும் செயல் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. தொழிலாளர்கள் மற்றும் இதரப் பணியாளர்கள் அனைவருக்கும் முகக்கவசங்களும் தேவையான இதர தற்காப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x