Published : 30 Jun 2020 03:36 PM
Last Updated : 30 Jun 2020 03:36 PM

குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு மலிவு விலையில் வீடுகள்: உலக வங்கியுடன் தமிழக அரசு ஒப்பந்தம்

குறைந்த வருவாய்ப் பிரிவினர் மலிவு விலையில் வீடுகளை பெறுவதற்கு உதவும் வகையில் இந்திய அரசு, தமிழ்நாடு மாநில அரசு மற்றும் உலக வங்கி ஆகியவை சட்டபூர்வமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

200 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள முதலாவது தமிழ்நாடு வீட்டுவசதி வலுப்படுத்தும் திட்டம் மற்றும் 50 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் வாழ்விட மேம்பாட்டுத் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களுக்கான சட்டபூர்வமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இவை மாநிலத்தின் வீட்டுவசதித் துறைக்கான கொள்கைகள், நிறுவனங்கள் மற்றும் ஒழுங்கமைப்புகள் ஆகியவற்றை வலுப்படுத்துவதாக அமையும்.

200 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள முதலாவது தமிழ்நாடு வீட்டுவசதி வலுப்படுத்தும் திட்டமானது, மலிவான வீடுகளை வழங்குவது என்ற மாநில அரசின் முக்கிய பங்கிலிருந்து அதற்கான வசதிகளை செய்து தருவதாக படிப்படியாக மாறுவதன் மூலம் அதிக அளவில் மலிவான வீடுகள் வழங்குவதை அதிகரிப்பது என்ற அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு உதவி செய்வதாக அமையும். குறைந்த வருவாயுள்ள குடும்பங்களுக்கான மலிவான வீடுகளை வழங்குவதில் தற்போது நிலவும் ஒழுங்குமுறை ரீதியான தடைகளை அகற்றி, இத்துறையில் தனியார் பங்கேற்பினை ஊக்குவிப்பதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்திய அரசின் சார்பில் மத்திய நிதி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் சமீர் குமார் காரே, உலக வங்கியின் சார்பில் நாட்டு இயக்குநர் (இந்தியா) ஜுனைத் கமால் அகமத் ஆகியோர் இந்த கடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். அதே நேரத்தில் திட்ட ஒப்பந்தங்களில் தமிழ்நாடு மாநில அரசின் முதன்மை இருப்பிட ஆணையர் ஹிதேஷ் குமார் எஸ். மக்வானா மற்றும் உலக வங்கியின் சார்பில் ஜுனைத் கமால் அஹமத் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

தமிழ்நாடு மாநில அரசின் தொலைநோக்கு ஆவணத்தில் சுட்டிக் காட்டியிருந்தபடி பாதுகாப்பான, மலிவான வீட்டு வசதியை வழங்குவது என்பது மாநில அரசின் மிக முக்கியமான முன்னுரிமையாக உள்ளது என்றும் காரே குறிப்பிட்டார். பிரதமர் வீட்டு வசதி (நகர்ப்புறம்) திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு, உலக வங்கியிடமிருந்து பெறப்பட்டுள்ள இரு திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் மாநிலத்தில் நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள ஏழைகள் பெருமளவிற்கு சிறப்பான வீட்டு வசதியைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அவர்களின் வாழ்க்கை நிலைமைகளும் மேம்படும் வாய்ப்புள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மாநிலத்தின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட சரிபாதி பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். இந்த அளவு 2030ஆம் ஆண்டில் 63 சதவீதமாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சுமார் 60 லட்சம் பேர் (அதாவது மாநிலத்தின் நகர்ப்புற மக்கள் தொகையில் 16.6 சதவீதம் பேர்) நகர்ப்புற குடிசைப்பகுதிகளில் வசித்து வருகின்றனர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதுள்ள கொரோனா பெருந்தொற்றானது நகர்ப்புறக் குடும்பங்களை இதுவரையில் கண்டிராத வகையில் வறுமை அதிகரிப்பு, மனித மூலதனம், சொத்துக்கள், வாழ்க்கை ஆதாரங்கள் இழப்பு ஆகிய அபாயங்களை அதிகரித்துள்ளது. இந்தத் தாக்கமானது ஏழைகளிடையே, குறிப்பாக மிக அடிப்படையான வசதிகளும் கூட குறைவாகவே பெறுகின்ற நகர்ப்புற குடிசைப்பகுதிகளில் மிக நெருக்கமான சூழ்நிலையில் வசித்து வருகின்றவர்களிடையே மிகவும் அதீதமானதாக இருக்கும்.

ஏழைகள் மற்றும் நலிந்த பிரிவினரின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தும் வகையில் பாதுகாப்பான, மலிவான வீட்டுவசதியை வழங்க வேண்டும் என்ற மாநில அரசின் தொலைநோக்கிற்கு உதவி செய்வதாக இத்திட்டங்கள் அமையும் என்றும் அஹமத் குறிப்பிட்டார்.

இதனோடு கூடவே, மாநிலத்தில் வீட்டு வசதித் துறையை வலுப்படுத்தவும், வீட்டு வசதி நிதித் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவளிக்கவும் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் வாழ்விட மேம்பாட்டு திட்டத்திற்கும், 50 மில்லியன் டாலர் நிதியுதவிக்கும் உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் வீட்டுவசதி நிதியுதவித் தொழிலில் புதிய கண்டுபிடிப்பான தமிழ்நாடு வாழ்விட நிதி என்ற புதியதொரு நிதியமைப்பில் 35 மில்லியன் டாலர்கள் அளவிற்கு பங்குத் தொகையை வழங்குவதன் மூலம் இத்திட்டத்திற்கு நிதியுதவி வழங்கப்படும்.

தமிழ்நாடு வாழ்விட நிதிக்கு வழங்கப்படும் இந்தத் தொடக்க நிலையிலான ஆதரவின் மூலம் குறுக்குவெட்டு மானியத்திற்கான வாய்ப்புகள் ஏற்படும். அதாவது வணிக ரீதியான மற்றும் உயர்வருவாய் பிரிவுகளுக்கான மேம்பாட்டு திட்டங்களில் இருந்து பெறப்படும் அதிக வருவாய் மலிவான வீட்டு வசதியின் மூலம் பெறப்படும் குறைந்த வருவாயை சரிகட்டுவதாக அமையும். இதன் மூலம் இத்துறையில்

முதலீடு செய்ய முன்வருவோருக்கு மலிவான வீட்டு வசதித் திட்டமும் கூட வணிகரீதியாக சாத்தியமானதாகச் செய்யும். இத்திட்டமானது மலிவான வீட்டுவசதியை மாநிலத்தில் வழங்கி வரும் முக்கிய அமைப்பான தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், சென்னை பெருநகரப் பகுதியின் நிலப் பயன்பாட்டிற்கான திட்டங்களுக்கான ஆணையமான சென்னை மாநகர மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு வாழ்விட நிதியின் சொத்துக்கள் நிர்வாகத்திற்கான நிறுவனமான தமிழ்நாடு கட்டமைப்பு நிதி மேலாண்மை கழகம் ஆகிய முக்கிய வீட்டு வசதி நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்துவதாகவும் அமையும்.

உலக வங்கியின் மூத்த நகர்ப்புற பொருளாதார நிபுணரும், வீட்டு வசதித் துறையை வலுப்படுத்துவதற்கான திட்டத்தின் பணிக்குழுத் தலைவருமான யூன்ஹீ கிம் கூறுகையில் வீட்டுவசதிக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக உலக நாடுகள் மிகத் துரிதமான வகையில் நகர்ப்புற மயமாகிக் கொண்டு வரும் நிலையில், பொதுத்துறை மட்டுமே இந்தத் தேவைகளை நிறைவேற்ற முடியாது என்பதையே உலக அளவிலான அனுபவம் சுட்டிக் காட்டுகிறது. தனியார் துறைக்கு மலிவான வீட்டு வசதி என்பது மேலும் கவர்ச்சிகரமானதாக செய்யும் வகையில் சந்தையில் ஊக்குவிப்புகளை வழங்குவது, ஒழுங்குமுறை வசதிகளை வழங்குவது ஆகியவற்றின் மூலம் பொதுத்துறை மிக முக்கியமானதொரு பங்கினை வகிக்க முடியும்.

மேலும் இந்த இரு திட்டங்களுமே ஒன்றுக்கொன்று உதவி செய்வதாக இருக்கும் என்றும், தமிழ்நாட்டில் வீட்டு வசதித் துறையில் மாற்றங்களை கொண்டு வரும் வகையில் முக்கிய நிறுவனங்களை வலுப்படுத்தும் என்றும் உலக வங்கியின் மூத்த நகர்ப்புற நிபுணர் மற்றும் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்தின் பணிக்குழுத் தலைவருமான அபிஜித் சங்கர் ராய் குறிப்பிட்டார்.

மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான சர்வதேச வங்கியிடமிருந்து பெறப்பட்டுள்ள 200 மில்லியன் டாலர்கள் மற்றும் 50 மில்லியன் டாலர்களுக்கான இந்தக் கடன்கள் மூன்றரை ஆண்டுகள் நீட்டிப்புக் காலம் உள்ளிட்டு மொத்தம் 20 ஆண்டுகளில் நிறைவடையக் கூடியவை ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x