Published : 29 Jun 2020 03:29 PM
Last Updated : 29 Jun 2020 03:29 PM

பெட்ரோலியம் உட்பட எரிபொருள் துறைக்கு  கடும் நெருக்கடி: தர்மேந்திர பிரதான் கவலை

நமது நாட்டில் எரிபொருள் துறை கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

நாடுமுழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 21 நாட்களாக உயர்த்தப்பட்டு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலையை கடந்த 7-ம் தேதியிலிருந்து 22-வது முறையாக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி இன்று அறிவித்துள்ளன.

இதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 5 பைசாவும், டீசலுக்கு 13பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது, நேற்று ஒரு நாள் மட்டும் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இதன் மூலம் கடந்த 3 வாரங்களில் 22 முறை பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.17 பைசாவும், டீசல் லிட்டருக்கு ரூ.11.14 பைசாவும் விலை அதிகரித்துள்ளது.

டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.38 பைசாவிலிருந்து, ரூ.80.43 பைசாவாக அதிகரி்த்துள்ளது.டீசல் ஒரு லிட்டர் ரூ.80.40 பைசாவிலிருந்து ரூ.80.53 பைசாவாக உயர்ந்துள்ளது.

மும்பையில் பெட்ரோல் லிட்டர் ரூ.87.14 பைசாவிலிருந்து ரூ.87.19 ஆகவும், டீசல் ரூ.78.71 லிருந்து ரூ.78.83 பைசாவாகவும் அதிகரித்துள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை இன்றைய நிலவரப்படி லிட்டர் ரூ.83.63 பைசாவாகவும், டீசல் லிட்டர் ரூ.77.72 பைசாவுக்கும் விற்பனையாகிறது.

நாடுமுழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 21 நாட்களாக உயர்த்தப்பட்டு வருவதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடுமுழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்தநிலையில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:
உலக பொருளாதாரமே தற்போது கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இந்திய பொருளாதாரமும் பெரும் சவால்களை சந்தித்து வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் தேவை கடந்த ஏப்ரல் முதல் மே மாதங்களில் 70 முதல் 80 சதவீதம் வரை குறைந்துபோனது. இதனால் நமது பொருளாதாரமும் கடும் நெருக்கடியை சந்திக்கிறது. இதனால் நமது நாட்டில் எரிபொருள் துறை கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x