Published : 26 Jun 2020 04:37 PM
Last Updated : 26 Jun 2020 04:37 PM

பிரதமர் மோடிக்கு ஐஎம்எப் தலைமைப் பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத்தின் அறிவுரை

இந்தியாவின் பொருளாதாரம் இந்த ஆண்டு 4.5% சரிந்து 1%க்கும் சற்று கூடுதலாகவே வளர்ச்சி இருக்கும் என்று ஐ.எம்.எஃப் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.

எதிர்பார்க்கப்பட்டதை விட கரோனா பெருந்தொற்று நோய் மிகப்பெரிய எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இது தொடர்பாக தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சியில் அவர் தெரிவித்த போது, “2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளுக்கான வளர்ச்சி கணிப்புகளை பார்த்தோமானால் இந்தியாவில் வளர்ச்சி 1%க்கும் சற்று கூடுதலாக இருக்கும் அவ்வளவே. இது வலுவான நிலை இல்லை, ஆனால் உலகெங்கும் பிற நாடுகளிலும் இதே நிலைதான்.

இந்தியாவில் இந்த ஆண்டு பெரிய அளவில் சரிவு இருக்கும். எல்லாம் சரியாகும் போது இந்தியாவும் மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு திரும்பும்.” என்றார்.

பிரதமர் மோடிக்கான ஆலோசனையாக அவர் கூறியதாவது, “இந்தியா தனது கரோனா சோதனை திறன்களை விரிவுபடுத்த வேண்டும். பொருளாதார ரீதியாக நலிவுற்றவர்களுக்கு கையில் ரொக்கம் உள்ளிட்ட திட்டங்கள் உதவும். அதே போல் சிறு, குறு நடுத்தர தொழில்கள் நசிவடையாமல் பாதுகாப்பது, மேலும் சீர்த்திருத்தங்களுக்கான வாய்ப்புகளை அங்கீகரிப்பது” என்றார்.

அவர் சீனா பற்றி கூறும்போது, “பெரிய பொருளாதாரங்களில் சீனா நேர்மறையான வளர்ச்சியுடன் உள்ளது. இன்னொரு பொருளாதாரத்தை இந்தக் காலக்கட்டத்தில் அதற்கு இணையாகக் கூற முடியவில்லை. கரோனா மீட்சி வலுவாக உள்ளது. வைரஸை கட்டுப்படுத்துவதில் அவர்கள் விரைவில் வெற்றியடைகின்றனர். மிகச்சுருக்கமான காலக்கட்டத்தில் வைரஸை கட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.

பொருளாதாரங்கள் மீண்டும் திறந்தாலும் கரோனா குறித்த நிச்சயமின்மை நிலைமையே உள்ளது, இந்த பெருந்தொற்று இரண்டு ஆண்டுகளில் 12 ட்ரில்லியன் டாலர்களை அழித்து விடும். ” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x