Last Updated : 13 Jun, 2020 11:52 AM

 

Published : 13 Jun 2020 11:52 AM
Last Updated : 13 Jun 2020 11:52 AM

அத்தியாவசியப் பொருட்கள் விலை உயருமா? பெட்ரோல், டீசல் விலை ஒரு வாரத்தில் 4 ரூபாய் அதிகரிப்பு

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 7-வது நாளாக இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 59 பைசாவும், டீசல் 58 பைசாவும் அதிகரித்துள்ளது.

கரோனா வைரஸால் லாக்டவுனில் இருந்த பல்வேறு நாடுகள் பொருளாதாரத்தை மீண்டும் இயல்புப் பாதைக்குக் கொண்டுவரும் நோக்கில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளன.

இதனால் தொழிற்சாலைகள், போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளன. பொருளாதார சூழல் இயல்புபாதைக்குத் திரும்புவதையடுத்து, சர்வதேச சந்தையில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது

அந்த விலை உயர்வின் தாக்கம் இந்தியாவின் சில்லறைச் சந்தையிலும் எதிரொலித்து, கடந்த ஒரு வாரமாக பெட்ரோல், டீசல் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

கடந்த 83 நாட்களுக்கும் மேலாக சர்வதேச சந்தையில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை படு வீழ்ச்சியடைந்து பேரல் 20 டாலருக்கும் கீழாகச் சென்றபோது, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் எந்தக் குறைப்பையும் எண்ணெய் நிறுவனங்கள் செய்யவில்லை. அந்த விலைக் குறைப்பின் பலன்களை நுகர்வோருக்கு அளிக்கவில்லை. ஆனால், தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்ந்தவுடன் அந்த விலை உயர்வின் தாக்கத்தை உடனடியாக மக்கள் மீது எண்ணெய் நிறுவனங்கள் சுமத்துகின்றன.

இதன்படி டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.74.57 பைசாவிலிருந்து, ரூ.75.16 பைசாவாக அதிகரித்துள்ளது. டீசல் லிட்டர் ரூ.72.81 பைசாவிலிருந்து, ரூ.73.39 பைசாவாக உயர்ந்துள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.78.99 பைசாவாகவும், டீசல் லிட்டர் ரூ.71.64 பைசாவாகவும் அதிகரித்துள்ளது.

கடந்த 7 நாட்களாக சராசரியாக பெட்ரோல், டீசலில் லிட்டருக்கு 50 பைசாவுக்கும் குறையாமல் விலை அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் 90 பைசாவும், டீசல் 4 ரூபாயும் அதிகரித்துள்ளது.

டீசல் விலை ஒரு வாரத்தில் லிட்டருக்கு 4 ரூபாய் அதிகரித்து இருப்பதால், இனிவரும் நாட்களில் சரக்குப் போக்குவரத்துக்கான கட்டணத்தையும் லாரி உரிமையாளர்கள் உயர்த்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே கரோனா வைரஸ் லாக்டவுனால் லாரி உரிமையாளர்கள் வேலையிழந்து பெரும் சிரமத்துக்குள்ளாகி இருக்கும் நிலையில் இந்த விலை உயர்வு அவர்களை மேலும் இன்னல்களுக்கு ஆளாக்கும். இந்த விலை உயர்வை அவர்கள் சமாளிக்க முடியாமல் சரக்குக் கட்டணத்தில் ஏற்றினால், காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை வரும் நாட்களில் உயரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x