Published : 11 Jun 2020 12:36 PM
Last Updated : 11 Jun 2020 12:36 PM
சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 60 பைசா உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.74 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.83 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாட்களிலும் லிட்டருக்கு 60 பைசாவும், செவ்வாய் அன்று 40 பைசாவும், புதன்கிழமை அன்று 55 பைசாவும் உயர்த்தப்பட்டது
கரோன வைரஸ் பாதிப்பு குறைந்து பல நாடுகளில் பொருளாதார நடவடிக்கை வேகமெடுத்து இருப்பதால், பெட்ரோலியக் கச்சா எண்ணெய்க்கான தேவை திடீரென அதிகரித்துள்ளது. இதனால், சர்வேதச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால், அடுத்துவரும் 10 நாட்களும் விலை உயர வாய்ப்பு இருக்கிறது. பெட்ரோல், டீசல் இரு எரிபொருளிலும் லிட்டர் ரூ.5 வரை உயர வாய்ப்புள்ளது என்று எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஏப்ரல் மாதம் கச்சா எண்ணெய் விலை படுவீழ்ச்சி அடைந்து 15 முதல் 20 டாலராகச் சரிந்த நிலையில் இப்போது பீப்பாய் ஒன்று 40 டாலராக அதிகரித்துள்ளதே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கான காரணமாகும்.
தலைநகர் டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு இன்று 60 பைசா உயர்த்தப்பட்டு, ரூ.74 ஆகவும், டீசல் லிட்டர் ரூ.72.22 ஆகவும் விற்கப்படுகிறது.
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டர் ரூ.77.96 பைசாவாகவும், டீசல் லிட்டர் ரூ.70.64 பைசாவாகவும் இருக்கிறது.
தற்போது பெட்ரோல், டீசல் உற்பத்தி செலவுக்கும், விற்பனை விலைக்கும் இடையிலான வேறுபாடு லிட்டருக்கு ரூ.5 முதல் ரூ.6 வரைதான் இருக்கிறது. ஒருவேளை சர்வதேச சந்தையில் வரும் நாட்களில் கச்சா எண்ணெய் விலை உயராமல் இருந்து அடுத்த இரு வாரங்களுக்கு பெட்ரோல், டீசலில் லிட்டருக்கு 40 பைசா முதல் 50 பைசா வரை நாள்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வந்தால், இடைவெளி சீரடைந்து, இழப்பு இல்லாத நிலை ஏற்படும்.
கடந்த 83 நாட்களில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் படுவீழ்ச்சி அடைந்தபோது பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவும் இல்லை. ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததும், தொடர்ந்து 5-வது நாளாக விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.
கடந்த மார்ச் 16-ம் தேதிதான் கடைசியாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்பின் கரோனா வைரஸ் பரவல், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி போன்றவற்றால் விலையில் எந்த மாற்றத்தையும் எண்ணெய் நிறுவனங்கள் செய்யவில்லை.
நுகர்வோர்களுக்குக் கிடைக்க வேண்டிய அனைத்துப் பலன்களையும் மே 6-ம் தேதி மத்திய அரசு கலால் வரியை பெட்ரோலில் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தியும், டீசலில் ரூ.13 உயர்த்தியும் எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT