Published : 28 May 2020 05:16 PM
Last Updated : 28 May 2020 05:16 PM

உள்நாட்டு விமானப் போக்குவரத்து; 3-வது நாளில் சுமார் 68 ஆயிரம் பேர் பயணம்: ஹர்தீப் சிங் பூரி தகவல்

உள்நாட்டு விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கிய நிலையில் 3வது நாளில், 67,861 பயணிகள் பயணித்ததாக மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறினார்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு கடந்த மார்ச் 25-ம் தேதி லாக்டவுனை அறிவித்தது. அது முதல் இந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கப்படவில்லை. சிறப்பு விமானங்களும், சரக்கு விமானங்களும் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன.

கடந்த 2 மாதங்களுக்குப் பின் 25-ம் தேதி உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தது. எனினும் உள்நாட்டு விமானங்களை இயக்குவதில் மாநிலத்துக்கு மாநிலம் பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தன.

எனினும் 25-ம் தேதி திட்டமிட்டபடி உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கியது. பயணிகள் அனைவருக்கும் விமானநிலையத்தில் முறைப்படி அனைத்துப் பரிசோதனைகளும் நடந்தன. பயணிகள் அனைவரும் செல்போனில் ஆரோக்கிய சேது செயலி இருக்கிறதா என அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டனர்.

சமூக விலகலை கடைபிடித்து நிற்கவும், முகக்கவசம் அணிந்திருக்கவும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டது
தொடர்ந்து 3 நாட்களில் ஏராளமான பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதுகுறித்து மத்திய விமானப் போக்குரவத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது:

நமது பொருளாதாரம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப உதவும். இந்தியா போன்ற பெரிய நாட்டை இணைப்பதில் சர்வதேச விமானங்களைப்போல், உள்நாட்டு விமானங்களும் முக்கியம்.

மே 25ம் தேதி உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கிய முதல் நாளில், 832 விமானங்களில் 58,318 பேர் பயணித்தனர். 2ம் நாளில், நமது விமான நிலையங்களில் 445 புறப்பாடு, 447 வருகை மூலம் 62,641 பயணிகள் பயணம் செய்தனர்.

உள்நாட்டு விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கிய 27-ம் தேதி 3வது நாளில், 460 புறப்பாடு, 464 வருகையில் மொத்தம் 924 வ விமானங்கள் இயக்கப்பட்டு 67,861 பயணிகள் பயணித்துள்ளனர்.

மார்ச் 26ம் தேதி தொடங்கிய உதான் லைப்லைன் சேவையால், தற்போது வரை 927 டன் மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் 579 விமான சேவைகளில் கொண்டு செல்லப்பட்டுள்ளன. வந்தே பாரத் திட்டம் மூலம் முதல்கட்டத்தில் 13,750 பேர் அமெரிக்கா, இங்கிலாந்து, வளைகுடா நாடுகள் உட்பட 12 நாடுகளில் இருந்து 64 விமானங்களில் இந்தியா திரும்பினர்.

தற்போதைய 2வது கட்டத்தில் ஐரோப்பா, ஆப்ரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் இருந்து ஜூன் 17ம் தேதி வரை 58,750 இந்தியர்கள், 311 விமானங்களில் திரும்ப அழைத்து வரப்படுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x