Published : 09 May 2020 06:57 AM
Last Updated : 09 May 2020 06:57 AM

45 நிமிடத்தில் ரூ.5 லட்சம் அவசர கால கடன்- வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ அறிமுகம்: 6 மாதங்களுக்குப் பிறகே தவணை ஆரம்பம்

புதுடெல்லி

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ),கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தனதுவாடிக்கையாளர்களுக்கு உடனடியாக ரூ.5 லட்சம் கடன் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. அவசர கால கடன் (எமர்ஜென்சி லோன் ஸ்கீம்) என்ற பெயரிலான இந்த கடன் 45 நிமிடத்தில் வழங்கப்படும்.

எஸ்பிஐ.யின் ``யோனோ’’ செயலி மூலம் இந்த கடனுக்குவாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த கடனுக்கு வட்டி 10.5 சதவீதமாகும். இதற்கான சுலப தவணை 6 மாதங்களுக்குப் பிறகு தொடங்கும்.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பலரது வருமானம் குறைந்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு இந்த கடன் வசதியைப் பெறும் வாடிக்கையாளர்கள் 6 மாதங்களுக்குப் பிறகு சுலபதவணை தொகையை செலுத்தலாம் என்று எஸ்பிஐ அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த கடன் வசதி தங்களுக்கு கிடைக்குமா அதற்குரிய தகுதிகளை அறிந்துகொள்ள குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) அனுப்பி தெரிந்து கொள்ளலாம். PAPL (space)என டைப் செய்து தங்களது வங்கிக்கணக்கின் கடைசி 4 இலக்கை எண்ணையும் சேர்த்து 567676 என்ற எண்ணுக்கு அனுப்பலாம்.

கடன் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ செயலியானயோனோ (YONO) செயலியை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு முன் கூட்டியே அங்கீகரிக்கப்பட்ட கடன் வசதியாக அளிக்கப்படும். தேவைப்படும் கடன் தொகையை பூர்த்தி செய்து அனுப்பலாம். உடன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முறை பயன்படுத்தும் சங்கேத எண் (பாஸ்வேர்டு) அவர் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணுக்கு வரும். அதை அனுப்பியவுடன் நீங்கள் கோரிய கடன் தொகை வாடிக்கையாளரது வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்.

பாரத ஸ்டேட் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டியை 15 புள்ளிகள் குறைத்துள்ளது. அத்துடன் மூத்த குடிமக்களின் சேமிப்புக்கான வட்டியை அதிகரித்துள்ளது. ‘எஸ்பிஐ வி கேர் டெபாசிட்’ என்ற பெயரிலான இந்த சேமிப்பு திட்டம் மூத்த குடிமக்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x