Published : 06 May 2020 02:33 PM
Last Updated : 06 May 2020 02:33 PM

கரோனா; இந்தியாவில் 4 பேரில் ஒருவருக்கு வேலையிழப்பு: ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை

புதுடெல்லி

கரோனாவை தொடர்ந்து அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் இந்தியாவில் 4 பேரில் ஒருவருக்கு வேலை இழப்பு ஏற்பட்டு உள்ளதாக வேலைவாய்ப்பு தொடர்பான ஆய்வு நிறுவனம் சிஎம்ஐஇ தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவும் வேகத்தை இதுவரை இந்தியா கட்டுப்படுத்தியுள்ள போதிலும் கரோனா வைரஸ் தாக்குதலானது ஏற்கெனவே நமது நாட்டின் வழக்கமான பொருளாதாரச் செயல்பாடுகள், வாழ்க்கைக்கான நடவடிக்கைகள் அனைத்தையும் சீர்குலைத்துள்ளது. இந்தியாவின் வர்த்தகம் மிக மோசமான பாதிப்பிற்கு ஆளாகியுள்ளது. மக்கள் திடீரென தங்கள் வருவாயை இழந்து நிற்கின்றனர். இதன் விளைவாக பொருள்களுக்கான தேவையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கின் விளைவாக ஏற்பட்டுள்ள சவால்கள், வர்த்தகத்தின் மீதான தாக்கம், ஏற்றுமதி மற்றும் சிறு, குறு தொழில்களின் மீதான பாதிப்பு, பொருளாதார ரீதியான அரசியல் முடிவுகளுக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் ஆகியவை குறித்த விரிவான ஆய்வுகளும் நடந்து வருகின்றன.
இந்தநிலையில் இந்தியாவில் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நான்கில் ஒருவர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக, நாட்டின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு குறித்த ஆய்வு நிறுவனமான சிஎம்ஐஇ அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சிஎம்ஐஇ அமைப்பு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ‘‘கரோனா முன்னெச்சரிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் தாக்கத்தால், பல்வேறு முக்கிய துறைகளின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மே 3-ம் தேதி கணக்கீட்டின் படி இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு வேலையின்மை 27.1 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது. மேலும், அமைப்பு மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பலரும் வேலை வாய்ப்பை இழப்பதால், அதிக அளவிலான மக்கள் வறுமையின் பிடியில் சிக்க வாய்ப்புள்ளது. அதுபோலவே சிறு மற்றும் குறுந்தொழில்கள் அதிகமாக பாதிக்கப்படும் ஆபத்து இருப்பதால் அது சார்ந்த தொழிலாளர்களும் பாதிப்பை சந்திப்பர்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x