Published : 05 May 2020 07:06 AM
Last Updated : 05 May 2020 07:06 AM

கரோனாவால் ஊரடங்கு அமல் எதிரொலி- இந்தியாவில் உற்பத்தித் துறை கடும் சரிவு

நாட்டில் உற்பத்தித் துறை ஏப்ரல்மாதத்தில் கடும் சரிவை சந்தித்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டன. சில நிறுவனங்கள் குறைவான ஊழியர்களுடன் செயல்பட்டன. இதன் விளைவாக உற்பத்தித் துறை கடும் சரிவைச் சந்தித்துள்ளது. நேற்று வெளியான மாதாந்திர உற்பத்தி குறியீட்டு அறிக்கை (பிஎம்ஐ) இதைத் தெரிவித்துள்ளது.

மார்ச் மாதத்தில் 51.8 புள்ளிகளாக இருந்த குறியீடு ஏப்ரலில் 27.4 புள்ளிகளாக சரிந்தது. இந்த குறியீடானது 50 புள்ளிகளுக்கு மேல் இருந்தால் வளர்ச்சிக்கான அறிகுறியாகவும், 50 புள்ளிகளுக்குக் கீழாக சரிந்தால் அது சரிவாகவும் கணக்கிடப்படும்.

நாடு முழுவதும் பெரும்பாலான வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதால், பொருட்களுக்கான தேவையும் சரிந்துள்ளது. இதனால்புதிய ஆர்டர்கள் பதிவாகவில்லை. கடந்த இரண்டரை ஆண்டுகளில் இந்த அளவுக்கு முன்பதிவு ஆர்டர்கள் இல்லாத சூழல் எப்போதும் உருவானதில்லை. அதேபோல சர்வதேச அளவிலும் நிதி நெருக்கடி உருவாகியுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

ஏற்றுமதி ஆர்டர்கள் பெருமளவு குறைந்துள்ளது. இதற்கு முன்பு2017-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்தே ஏற்றுமதி சரிவு காணப்பட்டது. அத்துடன் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

பொருட்களுக்கான தேவைகுறைந்த நிலையில் உற்பத்தித்துறையினர் ஏப்ரல் மாதத்தில் பெருமளவில் ஊழியர்களைக் குறைத்துள்ளனர். முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆட்குறைப்பு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது என்று அறிக்கை தெரிவிக்கிறது.

மார்ச் மாதத்தில் இருந்து ஏப்ரல் மற்றும் மே என நீடித்த கரோனா வைரஸ் தொற்று பீதி முற்றிலுமாக நீங்கி, ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டாலும் உற்பத்தித் துறை பழைய நிலையை எட்டுவதற்கு ஓராண்டு ஆகலாம் என்று இத்துறையினர் கணித்துள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x