Published : 05 May 2020 07:04 AM
Last Updated : 05 May 2020 07:04 AM

பங்குச் சந்தையில் ஒரே நாளில் 2 ஆயிரம் புள்ளிகள் சரிவு

புதுடெல்லி

பங்குச் சந்தை வாரத்தின் தொடக்க நாளான நேற்று 2 ஆயிரம் புள்ளிகள் வரை சரிந்தது.

மும்பை பங்குச் சந்தையில் 2,002 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 31,715 புள்ளிகளானது. இதேபோல தேசிய பங்குச் சந்தையில் 566 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 9,293 ஆக சரிந்தது.

ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, பஜாஜ் பைனான்ஸ், இன்ட்ஸ்இந்த் வங்கி, டாடா ஸ்டீல், ஆக்ஸிஸ் வங்கி, மாருதி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு விலைகள் கடுமையாக சரிந்தன. இவை அதிகபட்சமாக 10 சதவீதம் வரை சரிந்தது. முக்கியமான 30 முன்னணி நிறுவன பங்குகளில் 28 நிறுவன பங்குகள் சரிவைச் சந்தித்தன. பார்தி ஏர்டெல், சன் பார்மாஉள்ளிட்ட இரு நிறுவனங்கள் மட்டுமே ஓரளவு லாபம் ஈட்டின.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக நிறுவனங்கள் இயங்காததால் பெரும்பாலான நிறுவன பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன. மேலும் கடந்த வாரம் ஊரடங்கை மே 17 வரை அரசு நீட்டித்ததும் பங்குச் சந்தை சரிவுக்கு முக்கியக் காரணமானது.

இதனிடையே டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பும் 64 காசுகள் சரிந்து ரூ.75.73 என்ற அளவில் வர்த்தகமானது.

சர்வதேச அளவில் ஐரோப்பிய நாடுகளின் சந்தையும் சரிவைச் சந்தித்தது. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோ, கரோனா வைரஸ் பரவலுக்கு சீன ஆய்வகம் காரணமாக இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாகக் கூறிய நிலையில் ஐரோப்பிய சந்தையில் சரிவு காணப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x