Published : 19 May 2014 12:12 PM
Last Updated : 19 May 2014 12:12 PM

பிரிட்டன் பணக்காரர்கள் பட்டியல்: முதலிடத்தில் ஹிந்துஜா சகோதரர்கள்

பிரிட்டனில் வாழும் பணக்காரர்கள் பட்டியலில் ஹிந்துஜா சகோதரர்கள் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

பிரிட்டனில் வாழும் பணக் காரர்களில் ஆயிரம் பேரடங்கிய பட்டியலை `சன்டே டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் பிட்டன் வாழ் இந்தியர்களான லட்சுமி மிட்டல், லார்ட் ஸ்வராஜ் பால் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

ஸ்ரீசந்த் ஹிந்துஜா (78), கோபிசந்த் ஹிந்துஜா (74) ஆகி யோர் முதலிடத்தில் உள்ளனர். பிரிட்டனில் ரியல் எஸ்டேட், எண்ணெய் உள்ளிட்ட தொழில் களில் ஈடுபட்டுள்ள ஹிந்துஜா சகோதரர்கள் கடந்த ஆண்டு மூன்றாவது இடத்தில் இருந்தனர். இப்போது முதலிடத்துக்கு முன்னேறியுள்ளனர். இவர்களின் மொத்து மதிப்பு 1,190 கோடி பவுண்ட்களாகும்.

உருக்கு சாம்ராஜ்ய சக்ரவர்த்தி என்றழைக்கப்படும் லட்சுமி மிட்டலைக் காட்டிலும் இவர்களது சொத்து மதிப்பு சற்று அதிகமாகும். லட்சுமி மிட்டலின் சொத்து மதிப்பு 1,025 கோடி பவுண்ட்களாகும். இவர் மூன்றாமிடத்தில் உள்ளார்.

கடந்த ஆண்டு இப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த ரஷியாவைச் சேர்ந்த தொழிலதிபர் உஸ்மனோவ் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். இவரது சொத்து மதிப்பு 1,065 கோடி பவுண்ட்களாகும்.

கடந்த ஆண்டு ஹிந்துஜா சகோதரர்கள் தங்கள் வசம் இருந்த சவூதி அரேபியாவின் மசகு எண்ணெய் தயாரிப்பு நிறுவனமான பெட்ரோமின் நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை விற்றனர். இதன் மூலம் 20 கோடி பவுண்ட்கள் அவர்களுக்குக் கிடைத்தது. இந்தியாவில் இந்த தொகையை சொத்து வாங்க முதலீடு செய்தனர். இக்குழுமத்தின் வங்கியான இன்டஸ் இந்த் வங்கியின் மூலதனம் 270 கோடி பவுண்ட்களாக உயர்ந்துள்ளது. பிரிட்டனில் உள்ள ஹிந்துஜா ஆட்டோமோடிவ் வருமானம் 150 கோடி பவுண்ட்களாகும்.

ஆயிரம் பேரடங்கிய பணக்காரர்கள் பட்டியலில் பெண் தொழிலதிபர்களும் இடம்பெற்றுள்ளனர். பிரிட்டனில் வாழும் பெரும் பணக்காரர்களின் ஒட்டுமொத்த சொத்துமதிப்பு 51,800 கோடி பவுண்ட்களாகும். இது பிரிட்டனின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்காகும்.

பணக்காரர்களின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டைக் காட்டி லும் இப்போது 15.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக சன்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இவர்களின் சொத்து மதிப்பு 44,960 கோடி பவுண்ட்களாக இருந்தது.

2009-ம் ஆண்டு பிரிட்டனில் வாழும் 1,000 பணக்காரர்கள் பட்டியல் வெளியானது. அப் போது இவர்களது சொத்து மதிப்பு 25,800 கோடி பவுண்ட்களாக இருந்தது. 5 ஆண்டுகளில் இவர்களின் சொத்து மதிப்பு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

இந்தப் பட்டியலில் தொழிலதி பர்கள் பிரகாஷ் லோஹியா, அனில் அகர்வால், அஜய் கல்சி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

பணக்காரர்களின் சொத்து மதிப்பு கடந்த சில ஆண்டுகளில் மிக அதிக அளவு அதிகரித்துள்ளதாக 1989-ம் ஆண்டு முதல் பணக்காரர்கள் பட்டியலைத் தயாரிக்கும் பிலிப் பிரஸ் போர்ட் குறிப்பிட்டுள்ளார்.

சேவை நடவடிக்கையில் அதிகம் ஈடுபடுபவராகக் கருதப் படும் ரஷியாவின் உஸ்மனோவ் கடந்த ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனத்தில் தனக்கிருந்த பங்கு களை 52 கோடி டாலருக்கு விற்பனை செய்தார். இதன் மூலம் கிடைத்த தொகையை சீன தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். ரஷியா வின் மிகப் பெரிய உருக்கு தயாரிப்பு நிறுவனமான மெடாலி யன்வெஸ்ட் இவருக்குச் சொந்த மானதாகும். அத்துடன் மெகா போன் எனும் செல்போன் நிறு வனமும் இவருடையதாகும்.

லட்சுமி மிட்டலின் மைத்துனரான லோஹியா பணக்காரர்கள் பட்டியலில் 45-வது இடத்தில் உள்ளார். ஸ்வராஜ் பால் 47-வது இடத்திலும். வேதாந்தா குழுமத்தைச் சேர்ந்த அனில் அகர்வால் 49-வது இடத்திலும், அஜய் கல்சி 98-வது இடத்திலும் உள்ளனர்.

1989-ம் ஆண்டு இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்த 2-வது எலிசபெத் மகாராணி 33 கோடி பவுண்ட் சொத்துகளுடன் பட்டியலில் 285-வது இடத்தில் உள்ளார்.

பிரிட்டனில் வாழும் ஆயிரம் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெறுவதற்குக் குறைந்தபட்ச சொத்துமதிப்பு 8 கோடி பவுண்ட் களாவது இருக்க வேண்டும்.

இந்த ஆண்டு 114 பணக்கார பெண்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x