முதலீடுகள் வரவும் உடனடியாக பயன் கிடைக்கும் நடவடிக்கை தேவை: பிரதமர் மோடி வலியுறுத்தல்

முதலீடுகள் வரவும் உடனடியாக பயன் கிடைக்கும் நடவடிக்கை தேவை: பிரதமர் மோடி வலியுறுத்தல்
Updated on
1 min read

முதலீடுகள் வந்து சேரவும், உடனடியாக பயன் கிடைக்கும் வகையிலும் நடவடிக்கை தேவை என பிரதமர் மோடி மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதி வரை ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் பெரிய அளவில் பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதுடன் உள்நாட்டிலும் முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பாக பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் முதலீடுகள் வந்து சேரவும், உடனடியாக பயன் கிடைக்கும் வகையில் செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தினார். மேலும் மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து பிரச்சினைகளுக்கு வேகமாக தீர்வு காணவும், தேவையான ஒப்புதல்களை உடனுக்குடன் அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

தொழில்துறை ஊக்கம் பெறவும், தொழில்துறைக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in