Published : 29 Apr 2020 11:35 AM
Last Updated : 29 Apr 2020 11:35 AM

வாராக்கடன் தள்ளுபடி விவகாரம்: ராகுல் காந்தி விமர்சனங்களுக்கு நிர்மலா சீதாராமன் 13 ட்வீட்களில் பதிலடி 

புதுடெல்லி

வைர நகை வர்த்தகர் மெகுல் சோக்ஸி கடன் உள்பட வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் முதல் 50 பேரின் கடன் என மொத்தம் ரூ.68 ஆயிரம் கோடி கடனை “கணக்கியல் ரீதியாக” வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி அளித்த தகவலில் தெரியவந்ததையடுத்து ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சனம் செய்திருந்தார். அதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் சாகேத் கோகலே தாக்கல் செய்த மனுவில், பிப்ரவரி 16-ம் தேதி வரை கடன் வாங்கி வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் முதல் 50 நபர்கள் பட்டியலை ரிசர்வ் வங்கியிடம் கேட்டிருந்தார். அதில் ரூ.68 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டது தெரியவந்துள்ளது

ராகுல் காந்தி வேண்டுமென்றே கடனைத் திருப்பி அளிக்காதவர்களின் கடன்கள் தள்ளுபடியா என்று கேட்டும் வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் பட்டியலை மக்களவையில் வெளியிடாமல் மறைத்தது பாஜக என்றும், காரணம் இது அவர்களின் நண்பர்கள் என்றும் விமர்சனம் செய்திருந்தார்.

அவருக்கு தொடர் ட்வீட்களில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார்.

“ராகுல் காந்தியும், ரந்தீப் சிங் சுர்ஜேவாலாவும் மக்களை தவறாக வழி நடத்துகின்றனர். காங்கிரஸ் கட்சிக்கேயுரிய விதத்தில் தரவுகளை பரபரப்பாக்கி வருகின்றனர். அதாவது தரவுகளை அதன் கூற்றிடச் சூழலிலிருந்து தனியே பிரித்து பரபரப்பாக்கி வருகின்றனர்” என்று சாடினார்.

ராகுல் காந்தி, “நான் 50 வங்கி மோசடியாளர்கள் பெயர்களை தெரிவியுங்கள் என்றேன் ஆனால் நிதியமைச்சர் பதிலளிக்கவில்லை. தற்போது ஆர்பிஐ நிரவ் மோடி, மெஹுல் சோக்ஸி, மற்றும் பிற பாஜக நண்பர்கள் பட்டியலில் உள்ளனர், இதனால்தான் உண்மையை மறைக்கின்றனர்” என்று சாடினார்.

இதற்குப் பதில் அளித்த நிர்மலா சீதாராமன், 2009-10 மற்றும் 2013-14-ல் (யுபிஏ ஆட்சி) ஷெட்யூல் கமர்ஷியல் வங்கிகள் ரூ. 1,45,226 கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளது என்ரு பதிலளித்துள்ளார்.

மேலும் இது நடைமுறைகளின் படி கணக்கியல் ரீதியாக தள்ளுபடி செய்வதுதானே தவிர இது அவர்களிடமிருந்து கடனை வசூலிக்கும் நடைமுறையை கைவிடுவதாக அர்த்தமாகாது என்று நிர்மலா சீதாராமன் விளக்கினார்.

“கடனை திருப்பி அளிக்காதவர்கள் தங்களிடம் பணம் இருந்தும் திருப்பி செலுத்தாதவர்கள், பணத்தை வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்றவர்கள், வங்கிகள் அனுமதியின்றி சொத்துக்களை விற்றவர்கள் ஆகியோர் வேண்டுமென்றே கடனைத் திருப்பி அளிக்காதவர்கள் என்று கருதப்படுகிறார்கள். இவர்கள் யுபிஏவின் ஃபோன் பேங்கிங்குடன் தொடர்புடையவர்கள், புரோமோட்டர்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.

இங்கு நான் ரகுராம் ராஜன் கூறியதை மேற்கோள் காட்ட விரும்புகிறேன், வாராக்கடன்களில் பெரிய அளவு 2006-08இல் உருவானதே. புரோமோட்டர்களுக்கு அதிக கடன்கள் அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஏற்கெனவே கடனைத் திருப்பி அளிக்காமல் ஏமாற்றியவர்கள், தனியார் வங்கிகள் இவர்களுக்கு கடன் அளிக்காத போதும் பொதுத்துறை வங்கிகள் அளித்து வந்தன. தரமான கடன் அளிப்பு முறைகள் தேவை, என்று ரகுராம் ராஜன் அப்போது தெரிவித்ததைக் குறிப்பிட விரும்புகிறேன்.

வேண்டுமென்றே ஏமாற்றுபவர்கள் மீது பிரதமர் மோடி அரசுதான் நடவடிக்கை எடுத்து வருகிறது. 9,967 கடன் மீட்பு வழக்குகள், 3,515 எப்.ஐ.ஆர்.கள், சட்டங்களும் அமலில் உள்ளன. நிரவ் மோடி, மெகுல் சோக்ஸி, மல்லையாவிடமிருந்து முடக்கப்பட்ட பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளின் மதிப்பு 18,332.7 கோடி.

மேலும் இவை பற்றியெல்லாம் லோக்சபாவில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதும் சரி எதிர்கட்சியாக உட்கார்ந்திருக்கும் பொதும் சரி ஊழலை ஒழிப்பதிலோ குரோனியிசத்தை ஒழிப்பதிலோ ஏதாவது முனைப்புக் காட்டியுள்ளதா என்பதை அவர்களே ஆத்ம பரிசோதனை செய்து கொள்ளட்டும்” என்று நிர்மலா சீதாராமன் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x