Last Updated : 28 Aug, 2015 10:23 AM

 

Published : 28 Aug 2015 10:23 AM
Last Updated : 28 Aug 2015 10:23 AM

அரசின் பரிசீலனையில் உருக்குத் தொழிலைப் பாதிக்கும் தாராள வர்த்தக ஒப்பந்தம்

உள்நாட்டில் உருக்கு உற்பத்தித் தொழிலைப் பாதிக்கும் இறக்குமதி வரி மற்றும் பிற நாடுகளுடனான தாராள வர்த்தக ஒப்பந்தம் (எப்டிஏ) உள்ளிட்ட விஷயங்களை அரசு பரிசீலிக்கும் என்று மத்திய உருக்குத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உறுதியளித் துள்ளார்.

இறக்குமதி வரி குறைவால் வெளிநாடுகளிலிருந்து அதிகம் உருக்கு இறக்குமதி செய்யப் படுகிறது. இது உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதிக்கிறது. இந்த விவகாரம் அரசின் கவனத் துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் அரசு உரிய நேரத்தில் தேவையான நடவடிக் கையை எடுக்கும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

உருக்குத் துறையைப் பாதிக்கும் விஷயங்கள் தொடர் பாக மத்திய அமைச்சரின் கவனத்துக்கு இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) சில கோரிக் கைகளை விடுத்திருந்தது.

அதற்கு பதிலளித்துள்ள தோமர், உருக்குக்கு இறக்குமதி வரியை உயர்த்துவது தொடர் பாக விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி யளித்துள்ளதாக சிஐஐ வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக் கிறது.

உருக்கு தொழில்துறையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அமைச்சகம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. இது தொடர்பாக மத்திய நிதித்துறை மற்றும் வர்த்தக அமைச்சகத்துடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பார் என்று அமைச்சர் தோமர் தெரிவித்துள்ளார். உருக்குத்துறையைப் போலவே ரப்பர் தொழில்துறையினரும் இறக்குமதியால் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர். இந்த விஷயத்திலும் உள்நாட்டு தொழில்துறையினரைக் காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சீனாவிலிருந்து அதிக அளவில் ரப்பர் இறக்குமதி செய்யப்படுவது தொடர்பாக அரசின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதேபோல மின் தட்டுப்பாடு பிரச்சினையையும் ரப்பர் தொழில்துறையினர் எதிர்கொண்டுள்ளனர். இதற்கும் விரைவில் தீர்வு காணப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதேபோல தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ள நாடுகளிலிருந்து அதிக அளவில் உருக்கு மற்றும் ரப்பர் இறக்குமதியாவது குறித்து அரசு கவனித்து வருகிறது. இந்த விஷயத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

உலகிலேயே அதிக அளவில் உருக்கு உற்பத்தி செய்யும் நாடுகள் வரிசையில் இந்தியா மூன்றாமிடத்தில் உள்ளது. கடந்த நிதி ஆண்டில் இறக்குமதி உருக்கு அளவு 49 சதவீதம் அதிகரித்து 5.5 லட்சம் டன்னைத் தொட்டுள்ளது. இறக்குமதியான உருக்கின் மதிப்பு ரூ. 5,918 கோடியாகும்.

2013-14-ம் நிதி ஆண்டில் இறக்குமதி அளவு 3.7 லட்சம் டன்னாக இருந்தது. இதன் மதிப்பு ரூ.4,801 கோடியாகும்.

இம்மாத தொடக்கத்தில் இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த வருவாய்த் துறைச் செயலர் சக்தி காந்த தாஸ், உள்நாட்டுத் தொழில் துறையினரைக் காக்க, இயக்குநர் ஜெனரல் பரிந்துரைத்தால் கட்டுப்பாட்டு வரி விதிப்பதில் அரசு கால தாமதம் செய்யாது என தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.

ஏற்கெனவே மத்திய அரசு தாராள வர்த்தகம் செய்து கொண்ட ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளிலிருந்து அதிக அளவில் உருக்கு இறக்குமதி செய்யப்பட்டதால் உள்நாட்டுத் தொழில் துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரு நாடுகளிடையே பரிவர்த்தனை செய்யப்படும் பொருள்களுக்கு வரி விதிக்கப்படக் கூடாது என்பதுதான் தாராள வர்த்தக ஒப்பந்தமாகும்.

இதன்படி இத்தகைய பொருள்களால் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அவற்றை இரு நாடுகளும் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் அல்லது படிப்படியாகக் குறைத்துக் கொள்ளவேண்டும் என்பதுதான் விதியாகும்.

தாராள வர்த்தக ஒப்பந்த பட்டியலில் உருக்கை நீக்க வேண்டும் என்று தொழில் துறையினர் தொடர்ந்து வலியுறுத் துகின்றனர். ஜப்பான், கொரியா விலிருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதை யடுத்து இந்த கோரிக்கை வலுத்து வருகிறது.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்குக்கு டன்னுக்கு 309 டாலர் சுங்க வரி விதிக்கப்படுகிறது.

மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்குக்கு ஒரு டன்னுக்கு இறக்குமதி வரி 316 டால ராகும். ஆனால் கொரியாவிலிருந்து இறக்குமதியாகும் உருக்குக்கு ஒரு டன்னுக்கு 180 டாலர் மட்டுமே வரி விதிக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x