Published : 23 Apr 2020 08:35 PM
Last Updated : 23 Apr 2020 08:35 PM

கரோனா காரணமாக முடங்கிய அட்சய திருதியை நகை வியாபாரம்: 2 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழப்பு 

மதுரை

ஒவ்வொரு ஆண்டும் ‘அட்சிய திருதியை’ நாளில் நகைக்கடைகளில் மக்கள் நகைகளை வாங்க திருவிழா போல் குவிந்து வந்தநிலையில் இந்த ஆண்டு ‘கரோனா’ ஊரடங்கால் வரும் 26ம் தேதி ‘அட்சிய திருதியை’ நாளில் நகைவியாபாரத்திற்கு வாய்ப்பு இல்லாததால் நகைக்கடை உரிமையாளர்கள் கவலையடைந்துள்ளனர். ஊரடங்கால் நேரடியாகவும், மறைமுகமாகவும் 2 லட்சம் நகைக்கடை தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

'அட்சய திருதியை' நாளில் வாங்கும் பொருட்கள் பல மடங்காக பெருகும் என்பது மக்களின் ஆண்டாண்டு கால நம்பிக்கையாக உள்ளது. அதனால், இந்த நாளில் மக்கள் தங்க நகைகளை வாங்கி குவிப்பார்கள். இந்த ஆண்டுக்கான அட்சய திருதியை வரும் 26 தேதி வர உள்ளது. அதனால், 'அட்சய திருதியை' நாளை குறி வைத்து நகைக்கடைகளில் மிகப்பெரிய அளவில் வியாபாரம் நடைபெறும் .

வாடிக்கயாளர்களை கவர தங்க நகைகள், தங்க நாணயங்கள் சிறப்பு ஆஃபர்கள் வழங்கப்படும். அட்சய திருதியை நாளில் மட்டும் தோரயமாக தமிழகத்தில் 1500 கிலோ முதல் 2000 கிலோ வரை கடந்த ஆண்டுகளில் விற்பனையானதாக கூறப்படுகிறது. தங்கம் விற்பனையில் அட்சய திருதியை நாளில் தான் அதிக அளவு தங்கம் விற்பனையாகும் என்பதால் நகைக்கடை உரிமையாளர்கள் இந்த நாளை எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.

இந்நிலையில் ‘கரோனா’ வைரஸ் பரவதை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால், மற்ற வியாபார நிறுவனங்களை போல் தங்க நகைக்கடைகளும் மூடப்பட்டன. ஆனால், தங்க நகைகள் விலை மட்டும் குறையவே இல்லை. வழக்கம்போல் அதன் விலை இன்னும் உச்சத்திலே உள்ளன. ஆனால், ஊரடங்கால் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி அட்சயதிருதியை நாளில் நகைகடைகள் செயல்பட வாய்ப்பு இல்லை.

தங்கம் அத்தியாவசிய பொருள் இல்லை என்றாலும், தங்க நகைக்கடைகள் செயல்படாததால் தங்க நகை தயாரிப்பு, விற்பனை தொழிலில் மட்டும் நேரிடையாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டிருந்த தமிழகத்தை சேர்ந்த 2 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாக தங்க நகைக்கடை உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மதுரை ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகை கடை உரிமையாளர் செல்வம் கூறுகையில், ‘‘இன்று(நேற்று) ஒரு கிராம் தங்கம் ரூ.4,800 என்றநிலையில் உள்ளது. ஊரடங்கால் தங்க நகை வியாபாரம் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அட்சிய திருதியை முன்னிட்டு ஆன்லைனில் தங்க நாணயம், தங்க நகைகள் வியாபாரம் செய்வதற்கு நகைக்கடை உரிமையாளர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

செல்வம்

மக்கள் 2 கிராம் மோதிரம் என்றாலும் நேரடியாக குடும்பத்தோடு வந்து வந்துபார்த்து நகை வாங்கிப் பழகியவர்கள். தற்போது வருமானம் இல்லாமல் மக்கள் வீடுகளில் மடங்கிப்போய் உள்ளார்கள். அதனால், ஆன்லைன் தங்கம் வியாபாரம் எந்தளவுக்கு இந்த ‘அட்சியதிருதியை’ வியாபாரம் கைகூடும் என்பது தெரியவில்லை.

நகை வியாபாரம் அத்தியாவசியம் இல்லாவிட்டாலும் இந்த தொழிலை சார்ந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நகைக்கடைகளில் வங்கி கடன் பெற்றுதான் நகைகளை வாங்கி ஸ்டாக் வைத்துள்ளோம். 3 மாதம் தவனை செலுத்துவதில் விலக்கு அளித்தாலும் அதற்கான வட்டி மிக அதிகமாக உள்ளது.

அதனால், தவனை விலக்கு நகைவியாபாரத்திற்கு எந்தளவுக்கு உதவியாக இல்லை. ஊரடங்கி விலக்கி கொள்ளப்பட்டாலும் தங்க நகை வியாபாரம் சரிவில் இருந்து மீள ஒன்றரை ஆண்டுக்கு மேலாகும். நான் 36 ஆண்டு காலம் இந்த தொழிலில் உள்ளேன். இதுபோன்ற அசாதாரண சூழலை சந்திக்கவில்லை.

ஆனாலும், நாங்கள் எங்கள் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க பாதுகாப்போம். அதேநேரத்தில் தங்க நகை தயாரிப்பில் மறைமுகமாக பாதிக்கப்படும் நகை தயாரிப்பு தொழிலாளர்களையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு இந்திய அளவில் நகைக்கடை உரிமையாளர்கள் அசோசியேன் ஒருங்கிணைந்து உதவிகள் வழங்கி வருகிறோம், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x