Published : 12 Apr 2020 07:08 AM
Last Updated : 12 Apr 2020 07:08 AM

கரோனா பாதிப்பு நெருக்கடியால் ஏற்றுமதி துறையில் 1.5 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்: நிவாரண திட்டங்கள் அறிவிக்க கோரிக்கை

கரோனா பாதிப்பு காரணமாக தொழில் துறையில் ஏற்பட்டுள்ள முடக்கத்தினால் ஏற்றுமதி துறையில் 1.5 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக எடுக்கப்பட்டுள்ள ஊரடங்கு நடவடிக்கையால் பெரும்பாலான தொழில், வர்த்தக நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.இதனால் ஏறக்குறைய 50 சதவீதத்துக்கும் மேலான ஏற்றுமதி ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களிலும் பிற நாடுகளுடனான ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் முன்புபோல இருக்குமா என்ற சந்தேகமும் ஏற்றுமதி துறையின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.

இந்தச் சூழலால் ஏற்றுமதி துறை சார்ந்த தொழில்களில் 1.5 கோடி பேர் வேலைஇழக்கும் நிலை உண்டாகும் என்றும், இந்தத் துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதிலும் சவால்களை சந்திக்க நேரிடும் என்றும் இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு சம்மேளனம் (எஃப்ஐஇஓ) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து எஃப்ஐஇஓ தலைவர் சரத்குமார் சரஃப் கூறும்போது, “தற்போதைய சூழலில் ஏற்றுமதியாளர்கள் மிகக் குறைவான ஆர்டர்களையே கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு குறைந்தபட்ச ஊழியர்களைக் கொண்டு உற்பத்தியைச் செயல்படுத்தும் அனுமதி வழங்கப்படாவிட்டால் அவர்களின் நிலை மேலும் மோசமாகும். எனவே இதன் அடிப்படையில் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றார்.

மேலும் ஏற்றுமதி துறைக்கு நிவாரண திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டும். வட்டியில்லா மூலதன கடன்கள் வழங்குவதோடு, இபிஎஃப், ஈஎஸ்ஐ உள்ளிட்டவற்றுக்கு அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் எஃப்ஐஇஓ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x