Published : 09 Apr 2020 03:59 PM
Last Updated : 09 Apr 2020 03:59 PM

பெட்ரோல், டீசல் பயன்பாடு ஏப்ரலில் 66% வீழ்ச்சி; விமான எரிபொருள் 90% வீழ்ச்சி:  ஊரடங்கு எதிரொலி

ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாடு 66 சதவீதம் குறைந்துள்ளது. விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் பெட்ரோல் தேவை 90 சதவீதம் வீழ்ச்சியைடைந்துள்ளது.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் தேவை பெருமளவு குறைந்துள்ளது. இருசக்கர வாகனங்கள் உட்பட பெருமளவு வாகனங்கள் இயக்கப்படவில்லை. சரக்கு விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

கடந்த மார்ச் மாதம் கடைசி வாரத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மார்ச் மாதத்தில் மொத்த பெட்ரோலியப் பொருட்களின் நுகர்வு தேவை 17.79 சதவீதம் குறைந்துள்ளது. 16.08 மில்லியன் டன்களாக குறைந்துள்ளது.

நாட்டில் அதிகமாக பயன்படுத்தப்படும் எரிபொருளான டீசலின் தேவை 24.23 சதவீதம் குறைந்துள்ளது. 5.65 மில்லியன் டன்களாக வீழ்ச்சியைடைந்துள்ளது. பெட்ரோல் தேவை 16.37 சதவீதமாக குறைந்துள்ளது.

அதேசமயம் ஊரடங்கு உத்தரவு முழு அளவில் உள்ள ஏப்ரல் முதல் வாரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாடு 66 சதவீதம் குறைந்துள்ளது. விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் பெட்ரோல் தேவை 90 சதவீதம் வீழ்ச்சியைடைந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x