

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமர் நிதிக்கு 150 கோடி ரூபாய் வழங்கப்படும் என எச்டிஎப்சி குழுமம் அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்திருப்பதால், இந்தியா முழுவதும் அத்தியாவசிய பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணிகளுமே நடக்கவில்லை.
இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான செலவுகள் என பல்வேறு சிக்கல்களில் தற்போது இந்தியா சிக்கியுள்ளது. இதனைச் சமாளிக்க PM CARES Fund-க்கு நிதியுதவி அளிக்குமாறு பிரதமர் மோடி தனது தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு மூலமாக ட்வீட் செய்தார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி அறிவித்த வங்கிக் கணக்கிற்குப் பலரும் நிதியுதவி அளிக்கத் தொடங்கினர். பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து, தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள் என உதவிகள் செய்யத் தொடங்கியுள்ளனர்
குறிப்பாக பெரு நிறுவனங்கள் பலவும் அதிகஅளவில் நிதி வழங்கி வருகின்றன. அந்த வகையில் எச்டிஎப்சி வங்கி உட்பட எச்டிஎப்சி குழுமம் சார்பில் பிரதமர் நிதிக்கு 150 கோடி ரூபாய் வழங்கப்படும் என அந்நிறுவனம் அறித்துள்ளது.
நாடுமுழுவதும் கரோனா முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில் அதில் தங்களையும் இணைத்துக் கொள்வதாக எச்டிஎப்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.