Published : 01 Apr 2020 03:15 PM
Last Updated : 01 Apr 2020 03:15 PM

கரோனா ஒழிப்பு பணி: ரூ.1125கோடி செலவிடுகிறது விப்ரோ 

கரோனா ஒழிப்பு பணிகளுக்காக விப்ரோ குழுமம் 1125 கோடி ரூபாய் செலவிட உள்ளதாக தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்திருப்பதால், இந்தியா முழுவதும் அத்தியாவசிய பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணிகளுமே நடக்கவில்லை.

இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான செலவுகள் என பல்வேறு சிக்கல்களில் தற்போது இந்தியா சிக்கியுள்ளது. இதனைச் சமாளிக்க PM CARES Fund-க்கு நிதியுதவி அளிக்குமாறு பிரதமர் மோடி தனது தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு மூலமாக ட்வீட் செய்தார்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி அறிவித்த வங்கிக் கணக்கிற்குப் பலரும் நிதியுதவி அளிக்கத் தொடங்கினர். பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து, தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள் என உதவிகள் செய்யத் தொடங்கியுள்ளனர்

குறிப்பாக பெரு நிறுவனங்கள் பலவும் அதிகஅளவில் நிதி வழங்கி வருகின்றன. அந்த வகையில் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ கரோனா ஒழிப்பு பணிகளுக்காக 1125 கோடி ரூபாய் செலவிட உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதில் விப்ரோ நிறுவனம் 100 கோடி ரூபாயும், விப்ரோ எண்டர்பிரைசஸ் நிறுவனம் 25 கோடி ரூபாயும் அசிம் பிரேம்ஜி பவுண்டேஷன் 1000 கோடி ரூபாயும் என மொத்தமாக 1125 கோடி ரூபாய் செலவிடவுள்ளன.

இதுகுறித்து விப்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘‘கரோனா வைரஸுக்கு எதிராக மனிதகுலம் போராடி வரும்வேளையில் இந்த பணிக்காக வழக்கம்போல் விப்ரோ குழுமம் மற்றும் அசிம் பிரேம்ஜி பவுண்டேஷன் இணைந்து பணியாற்றவுள்ளது.

மனிதநேயப் பணிகள், மருத்துவ பணிகள், சுகாதார பணிகள் மற்றும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுதல் உள்ளிட் பணிகளை மேற்கொள்ளவுள்ளது. இந்த பணிகளை அரசு நிறுவனங்களுடன் இணைந்து அசிம் பிரமே்ஜி பவுண்டேஷனின் 1600 பேர் கொண்ட குழு இணைந்து மேற்கொள்ளும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x