Published : 20 Aug 2015 09:48 AM
Last Updated : 20 Aug 2015 09:48 AM
பொதுத்துறை வங்கிகள் தங்களது மூலதனத்தை அதிகரித்துக் கொள் வதற்கு ஏற்ப அந்த வங்கிகளில் மத்திய அரசு முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. இந்த முதலீடானது அவற்றுக்கு ஓரளவு பயனுள்ளதாக இருந்தாலும் வங்கிகளின் நிதித் தேவையை பூர்த்தி செய்ய போது மானதாக இருக்காது என்று தரச் சான்று நிறுவனமான ஸ்டாண்டர்டு அண்ட் பூர் (எஸ் அண்ட் பி) நிறு வனம் கருத்து தெரிவித்துள்ளது.
வங்கிகளை சீரமைக்க இந்திரதனுஷ் எனும் 7 அம்ச திட்டத்தை கடந்த வாரம் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார். இதன்படி இந்த ஆண்டு பொதுத்துறை வங்கிகளில் ரூ. 25 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும் என்றும் இதில் ரூ. 20 ஆயிரம் கோடி தொகை இம்மாத இறுதிக்குள் மேற்கொள்ளப்படும் என்றும் எஞ்சிய ரூ. 5 ஆயிரம் கோடி இந்த ஆண்டு இறுதியில் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித் துள்ள எஸ் அண்ட் பி நிறுவன தலைமை ஆய்வாளர் அமித் பாண்டே, மத்திய அரசு முதலீடு செய்ய உள்ளதாக வெளியிட்ட தகவல் வங்கிகளை பெருமளவு முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லாது என்றும், இத்தொகை போதுமானதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் பொதுத்துறை வங்கிகளில் அரசின் முதலீடானது அவற்றுக்கு மூச்சுவிட உதவும் என்று குறிப்பிட்டுள்ளார். வங்கிகளின் வாராக் கடன் மேலும் அதிகரிக்கும்பட்சத்தில் அவற்றின் சொத்து மதிப்பு மேலும் சரிவடைந்தால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் இப்போதைய முதலீடு எந்த வகையிலும் வருமான உயர்வுக்கு வழியேற்படுத்தாது என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.
2018-19 ம் நிதி ஆண்டுக்குள் பொதுத்துறை வங்கிகளில் அரசின் முதலீடு ரூ. 70 ஆயிரம் கோடியாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டது. இத்துடன் பொத்துறை வங்கிகள் கூடுதலாக ரூ. 1.10 லட்சம் கோடியை அடுத்த நான்கு ஆண்டுகளில் வெளிச் சந்தையில் திரட்டிக் கொள்ளவும் அரசு அனுமதித்துள்ளது.
அடுத்த ஓராண்டு முதல் ஒன்றரை ஆண்டில் அரசு மேற்கொள்ளும் முதலீடானது பொதுத்துறை வங்கிகளுக்கு உயிர் மூச்சாக இருக்கும். ஏனெனில் பெரும்பாலான பொதுத்துறை வங்கிகளில் உள் வள ஆதாரம் இல்லாத நிலையே உள்ளது. இதற்கு அவற்றின் வாராக் கடன் சுமை ஒரு காரணம் என்று எஸ் அண்ட் பி குறிப்பிட்டுள்ளது.
பற்றாக்குறையைக் குறைக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி அரசு செயல்படும்பட்சத்தில் வங்கிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு என்பது சாத்தியமில்லாத ஒன்று. இந்த விஷயத்தில் அரசு ஓரளவு நடுநிலையோடுதான் வங்கிகளுக்கான முதலீட்டை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
குறைந்தபட்ச முதலீட்டோடு வங்கிகள் செயல்பட வேண்டி யிருப்பது மிகவும் சிரமான விஷயம். இதனால் வங்கிகளை ஒருங்கிணைக்க வேண்டியது நீண்ட கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய ஒன்றாகும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சமீப காலமாக பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசு மேற்கொள்ளும் முதலீடுகள் வங்கிகளின் மூலதன தேவையை பூர்த்தி செய்வதாக இருக்கவில்லை என்பதுதான் யதார்த்த நிலை என்று கூறப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகள் முக்கிய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தம் உள்ளது. அதிகரித்து வரும் சந்தை போக்கு, அதிகபட்ச கட்டுப்பாடு உள்ளிட்டவற்றை வங்கிகள் எதிர்கொண்டாக வேண்டியுள்ளது.
பெரும்பாலான பொதுத்துறை வங்கிகளின் புத்தக மதிப்பை விட அவற்றின் பங்கு குறைந்த விலைக்கு வர்த்தகமாகிறது. இத்தகைய வங்கிகளின் வாராக் கடன், லாபமீட்டும் அளவு மற்றும் நிர்வாக செயல் திறன் மேம்படும்போதுதான் இவற்றின் பங்கு மதிப்பு உயரும் என்று அறிக்கை தெரிவிக்கிறது.
இப்போதைய விதிமுறைகளின் படி பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்கு 52 சதவீதத்துக் கும் கீழாக குறைய அனுமதிப்ப தில்லை. இதனாலேயே இவை கடன் சந்தையில் முதலீடுகளை திரட்டுவதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.
இத்தகைய சூழலில் வங்கிகள் தங்களது மூலதனத்தை அதிகரித் துக் கொள்ள மாற்று வழியைத் தேட வேண்டியுள்ளது. அப்போதுதான் எதிர்பார்த்த வளர்ச்சியை எட்ட முடியும் என்று அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT