Published : 27 Mar 2020 02:15 PM
Last Updated : 27 Mar 2020 02:15 PM

வீடு உள்ளிட்ட வங்கி கடன் இஎம்ஐ செலுத்த 3 மாத கால அவகாசம்: ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு நிர்மலா சீதாராமன் பாராட்டு

புதுடெல்லி

வீடு உள்ளிட்ட வங்கி கடன் மாத தவணைத் தொகையை செலுத்த 3 மாத கால அவகாசம் வழங்கியுள்ள ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு நிர்மலா சீதாராமன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸால் 21 நாட்கள் ஊரடங்கால் ஏற்படும் பொருளாதாரச் சிக்கல்களைச் சமாளிக்கும் வகையில் கடனுக்கான ரெப்போ வட்டி வீதத்தை 5.15 சதவீதத்தில் இருந்து 75 புள்ளிகள் குறைத்து 4.4 சதவீதமாக வட்டி வீதத்தை ரிசர்வ் வங்கி நிர்ணயித்தது.
அதுமட்டுமல்லாமல் பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு தொழில் நிறுவனங்கள் வங்கியில் கடன் பெற்றிருந்தால், அந்த கடனுக்கான மாத்த தவணையை செலுத்த 3 மாதங்கள் வரை அவகாசம் அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள், தாங்கள் வழங்கிய கடன்களுக்கான தவணைகளை வசூலிப்பதில் இருந்து 3 மாதங்கள் வரை கால அவகாசம் வழங்கலாம். அதோடு, தவணை செலுத்த வங்கிகள் அளிக்கும் 3 மாத அவகாசக் காலத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் சிபில் ஸ்கோரில் வங்கிகள் சேர்க்கக் கூடாது.

3 மாதங்களுக்கு கடன் தவணை செலுத்தாமல் விடுவதால், அதனை வாராக்கடனாகவும் சேர்த்துவிடக் கூடாது எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

‘‘வீட்டுக்கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடனுக்கான தவணைத் தொகையை திருப்பிச் செலுத்த 3 மாதகால அவகாசம் வழங்கியுள்ள நடவடிக்கை பெரிய நிம்மதியை அளித்துள்ளது. இதற்காக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸை பாராட்டுகிறேன். இதன் மூலம் கடன் வாங்கி தொழில் செய்யும் பலரும் வட்டி செலுத்தும் நெருக்கடியை உடனடியாக தவிர்க்க முடியும். அவர்களுக்கு கால அவகாசம் கிடைக்கும். வட்டியை குறைத்துள்ளதும் சரியான நடவடிக்கை’’ என கூறிள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x