Published : 27 Mar 2020 01:07 PM
Last Updated : 27 Mar 2020 01:07 PM
ரிசர்வ் வங்கி இன்று எடுத்துள்ள நடவடிக்கைகள் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நமது பொருளாதாரத்தை பாதுகாக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இந்த 21 நாட்களும் தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவை முடங்கும் சூழல் ஏற்படும். அதனால் பொருளாதாரச் சுணக்கம் ஏற்படும் எனக் கணிக்கப்பட்டது.
இதையடுத்தது நேற்று 1.70 லட்சம் கோடி மதிப்பில் பொருளாதார நிதித் தொகுப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி கந்த தாஸ், தொழில்துறையினருக்கும், மக்களுக்கும் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
கரோனா வைரஸால் 21 நாட்கள் ஊரடங்கால் ஏற்படும் பொருளாதாரச் சிக்கல்களைச் சமாளிக்கும் வகையில் கடனுக்கான ரெப்போ வட்டி வீதத்தை 5.15 சதவீதத்தில் இருந்து 75 புள்ளிகள் குறைத்து 4.4 சதவீதமாக வட்டி வீதத்தை ரிசர்வ் வங்கி நிர்ணயித்தது.
அதுமட்டுமல்லாமல் பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு தொழில் நிறுவனங்கள் வங்கியில் கடன் பெற்றிருந்தால், அந்த கடனுக்கான மாத்த தவணையை செலுத்த 3 மாதங்கள் வரை அவகாசம் அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘ரிசர்வ் வங்கி இன்று எடுத்துள்ள நடவடிக்கைகள் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நமது பொருளாதாரத்தை பாதுகாக்கும். இந்த அறிவிப்பின் மூலம் நமது நாட்டின் பணபுழக்கம் ஏற்படவும், வட்டி விகிதங்கள் குறைந்து பணம் கிடைக்கவும் வழிவகுக்கும். நடுத்தர மக்களுக்கு, தொழில் செய்பவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.’’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT