கரோனோ வைரஸ் முடக்கத்தால் பொழுதுபோக்கு துறையில் 6 கோடி பேர் பாதிப்பு: மத்திய அரசு தலையிட இஇஎம்ஏ கோரிக்கை

கரோனோ வைரஸ் முடக்கத்தால் பொழுதுபோக்கு துறையில் 6 கோடி பேர் பாதிப்பு: மத்திய அரசு தலையிட இஇஎம்ஏ கோரிக்கை
Updated on
1 min read

கரோனோ வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் பொழுதுபோக்கு சார்ந்த செயல்பாடுகள் மற்றும் வெவ்வேறு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் 6 கோடி பேர் பொருளாதார ரீதியாகபாதிக்கப்படுவார்கள் என்றுநிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு மேலாண்மைச் சங்கம் (இஇஎம்ஏ) தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசுஉடனே தலையிட்டு நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று அவ்வமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

இரு மாதங்களுக்கு ரூ.3,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், தற்போதைய சூழ்நிலையில் அடுத்த சில மாதங்களுக்கும் இழப்பு நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஇஎம்ஏ சங்கம் கூறியிருப்பதாவது, ‘கரோனோ வைரஸ் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து பல்வேறு உள்நாட்டு வெளிநாட்டு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் இத்துறை சார்ந்து பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இத்துறையில் 1 கோடி பேர் நேரடியாக வருமானம் ஈட்டி வருகின்றனர். மறைமுக அளவில் 5 கோடி பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். தற்போது இத்துறை மொத்தமாக முடங்கியுள்ள நிலையில் 6 கோடி பேர்களின் வருமானம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளது.

நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த துறை ஆண்டுக்கு 14 சதவீதம் அளவில் வளர்ச்சி அடைந்துவருகிறது. 2025-ல் ரூ.20,000 கோடி அளவில் வருவாய் ஈட்டக்கூடிய துறையாக திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in