Published : 19 Mar 2020 08:55 AM
Last Updated : 19 Mar 2020 08:55 AM

தொலைத் தொடர்பு நிறுவனங்களின் ஏஜிஆர் விவகாரம்; சுயமதிப்பீட்டை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்: மொத்த நிலுவையை அபராதத்துடன் செலுத்த உத்தரவு

ஏஜிஆர் நிலுவை தொடர்பாக தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சுய மதிப்பீடு அடிப்படையில் நிலுவையை செலுத்தி வந்தன. இந்நிலையில் ‘நிறுவனங்கள் சுய மதிப்பீடு செய்தது நீதிமன்ற உத்தரவை மீறிய செயல்பாடாகும். அந்த வகையில் தொலைத் தொடர்பு நிறுவனங்களும், சுய மதிப்பீடு செய்ய அனுமதி அளித்த தொலைத் தொடர்புத் துறையும் நீதிமன்றத்தை அவமதித்துள்ளன. அவற்றின் செயல்பாடுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று உச்ச நீதிமன்றம் நேற்று கடும் கண்டனம் தெரிவித்தது.

முந்தைய தீர்ப்பில் தெரிவித்த நிலுவைத் தொகையை அதற்கான வட்டி மற்றும் அபராதத்துடன் உடனே செலுத்த வேண்டும் என்றும்உத்தரவிட்டுள்ளது.

ஏஜிஆர் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை அருண் மிஸ்ரா, அப்துல் நசீர், எம்.ஆர். ஷாஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு முன் நேற்று வந்தது. அப்போது நீதிபதி அருண் மிஸ்ரா, ‘பல கட்ட கணக்கீடுகளுப்பிறகே ஏஜிஆர் நிலுவை இறுதி செய்யப்பட்டுள்ளது. பிறகு எதன் அடிப்படையில் நிறுவனங்கள் சுய மதிப்பீட்டை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டன? யார் அதற்கு அனுமதி அளித்தது? இது முற்றிலும் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்பாடு’ என்று கடுமையாகச் சாடினர்.

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அலைக்கற்றை பயன்பாடு, உரிமம் தொடர்பாக அதன் வருவாய் அடிப்படையில் அரசுக்கு குறிப்பிட்டத் தொகையை செலுத்த வேண்டும். அந்த வகையில் பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, டாடாடெலிசர்வீஸ் உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ரூ.1.47 லட்சம் கோடி அரசுக்கு செலுத்த வேண்டும். அத்தொகையை ஜனவரி 23-க்குள் செலுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் ஜனவரி 23-அன்று நிலுவைத் தொகைசெலுத்தமுடியாத நிலையில் அந்நிறுவனங்கள் தொலைத் தொடர்புத் துறையிடம் கால அவகாசம் கேட்டன. அந்நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று இவ்வழக்குத் தொடர்பாக இறுதித் தீர்ப்பு வரும் வரை அந்நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று தொலைத் தொடர்புத் துறை அறிவிப்பு வெளியிட்டது.

அதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை பிப்ரவரி 14-ல் நடைபெற்றது. அப்போது உச்ச நீதிமன்றம், நிலுவை செலுத்தாத நிறுவனங்கள் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், எதன் அடிப்படையில் அவற்றுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது என்றும் கேள்வி எழுப்பியது. அடுத்தகட்ட விசாரணைக்குள் மொத்த நிலுவையும் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து தொலைத் தொடர்புத் துறை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சுயமதிப்பீடு செய்து நிலுவை செலுத்த வலியுறுத்தியது.

நீதிமன்ற உத்தரவின்படி, வோடஃபோன் ஐடியா நிறுவனத்துக்கு ரூ.53,039 கோடி, ஏர்டெல் நிறுவனத்துக்கு ரூ.35,586 கோடி, டாடா டெலிசர்வீஸுக்கு ரூ.13,800 கோடி அளவில் நிலுவை உள்ளது. ஆனால், சுயமதிப்பீட்டின்படி ஏர்டெல் நிறுவனம் தங்கள் நிலுவைரூ.13,004 கோடி என்றும் வோடஃபோன் ஐடியா ரூ.21,533 கோடி என்றும், டாடா டெலிகாம் சர்வீஸ் ரூ.2,197கோடி என்றும் தெரிவித்தன. இந்நிலையில் சுயமதிப்பீட்டை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதுவரையில் ரூ.1.47 லட்சம் கோடி நிலுவையில் ரூ.29,200 கோடி மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றைய வர்த்தக முடிவில் வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் பங்கு மதிப்பு 34 சதவீதம் சரிந்து ரூ.3.20-க்கு வர்த்தகமானது. அதேபோல் ஏர்டெல் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 3.23 சதவீதம் சரிந்து ரூ.440-க்கு வர்த்தகமானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x