Published : 16 Mar 2020 10:39 AM
Last Updated : 16 Mar 2020 10:39 AM

யெஸ் வங்கி வழக்கு; அனில் அம்பானிக்கு அமலாக்கப்பிரிவு நோட்டீஸ்

மும்பை 

யெஸ் வங்கி மோசடி தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு அமனில் அம்பானிக்கு அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

யெஸ் வங்கியின் நிதிநிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி மார்ச் 5-ம் தேதி யெஸ் வங்கியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. ஏப்ரல்-3 வரை யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் அவர்களது வைப்புத் தொகையில் ரூ.50,000-க்குமேல் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப் பட்டது. யெஸ் வங்கியின் கடன் வழங்கும் செயல்பாடும் முடக்கப்பட்டது. வங்கியின் இயக்குநர்கள் குழுவை கலைத்துவிட்டு, எஸ்பிஐ-யின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி பிரசாந்த் குமாரை தனது பிரதிநிதியாக ரிசர்வ் வங்கி நியமித்தது.

யெஸ் வங்கியின் மீதான கட்டுப்பாடு வரும் மார்ச் 18-ம் தேதி விலக்கப்படும் என்றுநேற்று முன்தினம் மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல் வங்கியின் தலைமைச் செயல்அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக மூன்று ஆண்டுகளுக்கு பிரசாந்த் குமார் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதி நெருக்கடியால் திவால் ஆகும் நிலைக்கு ஆளான யெஸ் வங்கியை மீட்க எஸ்பிஐ உள்ளிட்ட ஏழு வங்கிகள் இணைந்து ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளன. யெஸ் வங்கியை மீட்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ள நிலையில் அந்த வங்கியில் நடந்த மோசடி தொடர்பாகவும் அமலாக்கப்பிரிவும், சிபிஐயும் விசாரணையை தொடங்கியுள்ளன.

விசாரணையில் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் நிர்வாகத்தின்கீழ் வங்கி இருந்தபோது தகுதியில்லாத பல பெரு நிறுவனங்களுக்கு ஏராளமான கடன் வழங்கப்பட்டு மோசடி நடந்துள்ளது தெரியவந்தது.

அதற்குப் பிரதிபலனாக அந்த நிறுவனங்கள் ராணா கபூரின் மனைவியின் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தியுள்ளன மேலும், ராணா கபூரின் மனைவி பிந்து, மகள்கள் ராகி கபூர் டான்டன், ரோஷிணி கபூர், ராதா கபூர் ஆகியோருக்கும் இந்த சட்டவிரோத பரிவர்த்தனையில் பங்கு இருப்பதாக அமலாக்கப்பிரிவினர் சந்தேகப்படுகின்றனர்.

குறிப்பாக டிஎச்எப்எல் நிறுவனத்திடம் இருந்து ரூ.600 கோடி பணம் கைமாறியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ராணா கபூர் கைது செய்யப்பட்டார்.

யெஸ் வங்கி மோசடி தொடர்பாக ராணா கபூர் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்தநிலையில் யெஸ் வங்கியில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் மற்றும் முறைகேடாக கடன் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பான புகாரில் அனி்ல் அம்பானியும் சிக்கியுள்ளார். அவரது நிறுவனத்துக்கும் யெஸ் வங்கி பெரும் தொகையை கடனாக அளித்துள்ள நிலையில் இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு அவரது சார்பில் ஆஜராக கால அவகாசம் கேட்டு பதிலளிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x