Published : 15 Mar 2020 09:09 AM
Last Updated : 15 Mar 2020 09:09 AM

சென்னையில் பெட்ரோல், டீசல் விலைகள் குறைந்தது

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 12 காசுகள் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 15 காசுகள் குறைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.72.57 ஆகவும், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.66.02 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 12 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.72.45ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 15 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.65.87ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

சர்வதேச அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை மோசமாக வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியது மத்திய அரசு.

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை கடந்த 2004-ம் ஆண்டு இருந்த விலைக் குறைவைப் போல் பேரல் ஒன்று 36 டாலராகக் குறைந்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.8 வரை குறையும் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.

காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன் நேற்று இது தொடர்பாகக் கூறிய போது, “சர்வதேசச் சந்தையில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த பலனை மக்களுக்கு வழங்கும் விதத்தில் பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலையை 40 சதவீதம் வரை மத்திய அரசு குறைக்க வேண்டும்.

கடந்த 2014-15-ம் ஆண்டில் இதேபோன்று தான் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் அந்தப்பலனை மக்களுக்கு வழங்கவில்லை

பெட்ரோலில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.22.98 பைசாவும், டீசலில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.18.33 பைசாவும் இதுவரை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

பிரமதர் மோடி அரசு 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வரும்போது, பெட்ரோலில் லிட்டருக்கு ரூ.9.48 பைசா கலால் வரி இருந்தது. , டீசலில் ரூ.3.56பைசா இருந்தது. ஆட்சிக்கு வந்தபின் பிரதமர் மோடி தலைமையிலான அரசு 12 க்கும் மேற்பட்ட முறை கலால் வரியை அதிகரித்துள்ளது.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி மோடி, அமித் ஷா தலைமையிலான அரசு மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கிறது. ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோலியப் பொருட்கள் வர வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்தும் பெட்ரோலியப் பொருட்கள் மீது தொடர்ந்து அதிகமான வரி விதிக்கப்படுகிறது

கடந்த 6 ஆண்டுகளாகக் கச்சா எண்ணெய் விலை 50 சதவீதம் அளவுக்குச் சரிந்தபோதிலும், பெட்ரோல், டீசல், எல்பிஜி விலையைக் குறைக்காமல் இருந்ததற்கு பாஜக அரசின் மோசமான மக்கள் விரோத கொள்கைகள் காரணம்.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் வீழ்ச்சிஅடைந்தவிட்டதால், அதன் பலனை மக்களுக்கு வழங்க மத்திய அரசு முன்வரவேண்டும். பெட்ரோல், டீசல் விலையை 35 முதல் 40 சதவீதம் வரை குறைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் பொருட்களை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவர வேண்டும்.” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x