Published : 09 Mar 2020 01:59 PM
Last Updated : 09 Mar 2020 01:59 PM

யெஸ் வங்கி மோசடி: சிபிஐயும் நடவடிக்கையை தொடங்கியது: 7 இடங்களில் சோதனை

யெஸ் வங்கி மோசடி தொடர்பாக ராணா கபூர் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐஎல் அண்ட் எஃப்எஸ், ஏடிஏஜி குழும நிறுவனம், காக்ஸ் அண்ட் கிங்ஸ், சிஜி பவர், டிஹெச்எஃப்எல், எஸ்ஸார் ஷிப்பிங், மெக்லாய்ட் ரஸ்ஸல் ஆகிய நிறுவனங்களுக்கு மட்டும் யெஸ் வங்கி ரூ.10,206 கோடிக்குமேல் கடன் அளித்துள்ளது. இவற்றில் சில நிறுவனங்கள் திவால் நிலையில் உள்ளன. இதனால் யெஸ் வங்கியின் வாராக் கடன் கடுமையாக உயர்ந்தது.

வாராக்கடன் அதிகரித்ததால் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கி நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி எடுத்துக் கொண்டது.

இதையடுத்து, யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் மும்பை வோர்லியில் உள்ள இல்லமான சாமுத்திரா மஹாலில் வெள்ளிக்கிழமை இரவு முதல் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி அவரை சட்டவிரோத பணப்பரிமாற்றச் சட்டத்தில் கைது செய்தனர்.விசாரணையில் ராணா கபூர் நிர்வாகத்தின்கீழ் வங்கி இருந்தபோது தகுதியில்லாத பல பெரு நிறுவனங்களுக்கு ஏராளமான கடன் வழங்கப்பட்டு மோசடி நடந்துள்ளது தெரியவந்தது.

அதற்குப் பிரதிபலனாக அந்த நிறுவனங்கள் ராணா கபூரின் மனைவியின் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தியுள்ளன மேலும், ராணா கபூரின் மனைவி பிந்து, மகள்கள் ராகி கபூர் டான்டன், ரோஷிணி கபூர், ராதா கபூர் ஆகியோருக்கும் இந்த சட்டவிரோத பரிவர்த்தனையில் பங்கு இருப்பதாக அமலாக்கப்பிரிவினர் சந்தேகப்படுகின்றனர்.

குறிப்பாக டிஎச்எப்எல் நிறுவனத்திடம் இருந்து ரூ.600 கோடி பணம் கைமாறியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் யெஸ் வங்கி மோசடி தொடர்பாக ராணா கபூர் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். மும்பையில் மொத்தம் 7 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததற்கான ஆதாரங்கள் மற்றும் அவர்களின் சொத்துக்களை கைப்பற்றும் நோக்கில் இந்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x