Last Updated : 07 Mar, 2020 04:43 PM

 

Published : 07 Mar 2020 04:43 PM
Last Updated : 07 Mar 2020 04:43 PM

என்னதான் ஆனது யெஸ் வங்கிக்கு? - சில முக்கிய தகவல்கள்

* 2004-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கிய சில தனியார் வங்கிகளில் ஒன்றாக தொடங்கியதுதான் யெஸ் வங்கி. ஸ்டார்ட் அப் நிறுவனம் போல ராணா கபூர், அசோக் கபூர் எனும் இரண்டு தொழில் முனைவோர்களால் தொடங்கப்பட்டது இந்த வங்கி.

* ரூ.150 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டது இந்த வங்கி, தொடங்கப்பட்ட ஓராண்டிலேயே பொதுப்பங்கு வெளியீடு மூலம் ரூ.300 கோடி திரட்டும் அளவுக்கு வளர்ந்தது. அப்போது வங்கிப் பங்கின் விலை ரூ.45 ஆக இருந்தது. 2017-ம் ஆண்டு இந்த வங்கிப் பங்கு உச்ச பட்ச விலையாக ரூ.385-க்கு விற்பனையானது.

* யெஸ் வங்கிக்கு தற்போது நாடு முழுவதும் 1,122 கிளைகளும், 1,220 ஏடிஎம்களும் உள்ளன. நவீன தொழில்நுட்பங்களைப் பின்பற்றும் முன்னோடி வங்கியாக இது திகழ்ந்தது. ஆனால் இன்று இவ்வங்கி பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.

* தற்போது வங்கியின் கடன் சுமை ரூ.14,700 கோடியாக உள்ளது. இது வங்கியின் சொத்து மதிப்பில் 54.5 சதவீதமாகும்.

* ஏடிஏஜி குழும நிறுவனம், காக்ஸ் அண்ட் கிங்ஸ், சிஜி பவர், டிஹெச்எஃப்எல், எஸ்ஸார் ஷிப்பிங், மெக்லாய்ட் ரஸ்ஸல் ஆகிய நிறுவனங்களுக்கு மட்டும் யெஸ் வங்கி அளித்த கடன் தொகை ரூ.10,206 கோடியாகும்.

* யெஸ் வங்கியின் செயல்பாடுகள் மட்டுமின்றி வங்கியின் பங்குகள் குறித்து 40 பங்கு தரகு நிறுவனங்கள் எதிர்மறைக் கருத்தை வெளியிட்டிருந்தன.

* வங்கி அளித்த கடன் தொகை விவரங்களைக் குறைத்துக் காட்டியதாக வெளியான தகவல்களும் வங்கிப் பங்குகளின் சரிவுக்குக் காரணமாயின.

* யெஸ் வங்கியை உருவாக்கிய அதன் நிறுவனர் ராணாகபூர், வங்கியில் ஒரு பங்கைக் கூட வைத்திருக்காமல் விற்பனை செய்ய எடுத்த முடிவு பெரும் நெருக்கடியை வங்கிக்கு அளித்தது.

* இதனால் வங்கியில் முதலீடு செய்திருந்த பல நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்து விட்டு வெளியேறின.

* வங்கியின் நிதி ஆதாரத்தைத் திரட்ட வங்கி மேற்கொண்ட முயற்சிகளும் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை.

* தனியார் வங்கியான கோடக் மஹிந்திரா வங்கியுடன் யெஸ் வங்கியை இணைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனால், கோடக் வங்கி தலைவர் உதய் கோடக், யெஸ் வங்கியை எடுத்து நடத்த ஆர்வம் காட்டவில்லை.

* ஓராண்டில் மட்டும் யெஸ் வங்கி பங்குகள் 80 சதவீத அளவுக்குச் சரிந்துவிட்டன. இது மேலும் சரிந்து திவால் ஆகும் நிலைக்குத் தள்ளப்படும் முன்பு ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

* அதன்படி, வாடிக்கையாளர்கள் ரூ.50,000 வரையில் வங்கியிலிருந்து அதிகபட்சமாக பணம் எடுக்கலாம். மார்ச் 5-ம் தேதி முதல் ஏப்ரல் 3-ம் தேதிவரை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் யெஸ் வங்கி இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* யெஸ் வங்கியின் 49 சதவீதப் பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x