Published : 29 Feb 2020 07:47 AM
Last Updated : 29 Feb 2020 07:47 AM
சீனாவில் உருவெடுத்து உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட் 19 (கரோனா வைரஸ்) தாக்குதல் காரணமாக சர்வதேச ஜிடிபி கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் என்று தொழில் வர்த்தக கூட்டமைப்பான பிஹெச்டிசிசிஐ குறிப்பிட்டுள்ளது.
நோய் பாதிப்பு காரணமாக விநியோக சங்கிலி அறுபட்டுள்ளது. இது சீனாவின் ஏற்றுமதியை மட்டும் பாதிக்கவில்லை, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் நாடுகளையும் பாதித்துள்ளது.
இத்தகைய சூழலில் நாம் உள்நாட்டு நுகர்வை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள சரிவை ஓரளவு ஈடுகட்ட முடியும் என்று சம்மேளனத்தின் தலைவர் டி.கே. அகர்வால் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் ஜவுளி வர்த்தகத்தில் சீனாவின் பங்களிப்பு 13 சதவீதமாக உள்ளது. இங்கிருந்து அமெரிக்கா, ஹாங்காங், ஜப்பான், கொரியா, வியட்நாம், ஜெர்மனி, இந்தியா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்படுவதால் உலகபொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இதனால் சர்வதேச சந்தை வேறு நாடுகளுக்கு மாறும் வாய்ப்பும் உள்ளது. இந்த நோயின் பாதிப்பு, அது தொடரும் தீவிரம் இவற்றை உள்ளடக்கியே சர்வதேச பொருளாதாரத்தின் எதிர்காலம் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கோவிட் 19 பாதிப்பால் சர்வதேச வளர்ச்சி 0.3 சதவீத பாதிப்பை ஏற்படுத்தும். இது டாலர் மதிப்பில் 25,000 கோடியாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
இத்தகைய சூழலில் இந்திய ஏற்றுமதியாளர்கள் தங்களது ஏற்றுமதி வாய்ப்புகளை பிரகாசப்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT