Published : 27 Feb 2020 08:02 AM
Last Updated : 27 Feb 2020 08:02 AM

நடப்பு ஆண்டில் கார் விற்பனை அதிகரிக்கும்: பொருளாதார ஆய்வு நிறுவனம் மூடி’ஸ் தகவல்

இந்தியாவில் கார்கள் விற்பனை கடந்த ஓராண்டாக சரிந்துள்ள நிலையில், நடப்பு ஆண்டில் சற்று நிலைத் தன்மை அடையும் என்று பொருளாதார ஆய்வு நிறுவனம் மூடி’ஸ் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் கார்கள் விற்பனை 11.8 சதவீதம் சரிந்தது.

இந்நிலையில் நடப்பு ஆண்டில் விற்பனை 0.5 சதவீதம் அளவில் உயரும் என்று மூடி’ஸ் தெரிவித்தது. இந்திய வாகன நிறுவனங்கள் கடந்த ஓராண்டுக்கு மேலாகவே கடுமையான சரிவை எதிர்கொண்டு வருகின்றன.

வாகன விற்பனை பெரும் சரிவைக் கண்டதால் பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைத்தன. 3.5 லட்சம் அளவில் ஊழியர்கள் வேலையிழந்தனர்.

இந்நிலையில் நடப்பு ஆண்டில் விற்பனை சற்று உயரக்கூடும் என்று மூடி’ஸ் தெரிவித்துள்ளது. வரும் ஏப்ரல் முதல் பிஎஸ் 6 வாகனங்கள் மட்டுமே விற்பனைசெய்யப்பட வேண்டும். அதைத்தொடர்ந்து விற்பனை சற்றுஅதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து மூடி’ஸ் கூறியதாவது, ‘பிஎஸ் 6 விதி, அரசின் சலுகை திட்டங்கள் போன்றவற்றால் இந்தியாவில் நடப்பு ஆண்டில் கார்கள் விற்பனை 0.5 சதவீதம் அளவில் உயரும். ஆனால் தற்போது நுகர்வு திறன் பாதிக்கப்பட்டுள்ளது. மட்டுமல்லாமல் நிதிச் சுழற்சியும் குறைந்துள்ளது.

இதன் விளைவாக பெரிய அளவு ஏற்றம் இவ்வாண்டில் எதிர்பார்க்க முடியாது. 2021-ம்ஆண்டில் விற்பனை 2 சதவீதம்வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என்று தெரிவித்தது.

அதேபோல், காரோனோ வைரஸ் தாக்கத்தில் உலகளாவிய விற்பனை சரியும் என்று கூறியுள்ளது. ‘உலகளாவிய அளவில் சென்ற ஆண்டில் வாகன விற்பனை 4.6 சதவீதம் குறைந்தது. 2020-ல் விற்பனை 2.5 சதவீதம் அளவில் குறையும். ஆனால் தற்போதைய சூழலில் அது 2.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால் அடுத்த ஆண்டு வாகன விற்பனை 1.5 சதவீதம் அளவில் உயரும்’ என்று தெரிவித்தது.

ஆனால் மொத்தத்தில் வாகனத் துறை மீதான அதன் பார்வை எதிர்மறையாக இருப்பதாக குறிப்பிட்டது. காரோனோ வைரஸ் தாக்கத்தால் சீனாவில் வாகன விற்பனை 2.9 சதவீதம் அளவில் சரியும் என்று தெரிவித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x