Published : 01 Feb 2020 08:02 PM
Last Updated : 01 Feb 2020 08:02 PM
11 ஆண்டுகளில் இல்லாத மந்தநிலைக்குச் சென்ற நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் விதமாக பட்ஜெட்டாக இருக்கும் என்ற பெரிய எதிர்பார்ப்பு நிலையில் மத்திய நிதியமைச்சர் இன்று சுமார் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் பட்ஜெட் அறிக்கையை வாசித்தார்.
வருவாய் அதிகரிப்புக்கும், மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கவும் இந்த பட்ஜெட் வழிவகை செய்கிறது என்று நிர்மலா சீதாராமன் பேசினார்.
இந்த பட்ஜெட்டினால் பயனடைபவர்கள் யார், பயனடையாதவர்கள் யார் என்பதைப் பார்ப்போம்:
பயனடைபவர்கள்:
1. போக்குவரத்து உள்கட்டமைப்பு:
தேசிய நெடுஞ்சாலைகளுக்கும், ரயில்வே துறைக்கும் உள்கட்டமைப்பு மற்றும் திட்டங்களுக்காக நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டில் ரூ. 1.7 ட்ரில்லியன், அதாவது 23.7 பில்லியன் டாலர்கள் தொகையை முன் மொழிந்துள்ளார். நெடுஞ்சாலைகள் கட்டமைப்பு, 12 நெடுஞ்சாலைத் திட்டங்கள் மற்றும் ரயில்வே உள்கட்டமைப்புத் திட்டங்கள் இதில் பயனடையும்.
உள்கட்டமைப்பு நிறுவனங்களான லார்சன் அண்ட் டூப்ரோ, கே.என்.ஆர். கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், ஐஆர்பி இன்ஃப்ரா ஆகிய நிறுவனங்கள் பயன்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2. எலெக்ட்ரானிக் உற்பத்தி:
மொபைல் போன்கள் உற்பத்தி, மின்னணு சாதனங்கள், செமி கண்டக்டர்கள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றின் உற்பத்தி இந்த பட்ஜெட்டினால் பயனடையும். இதன் மூலம் டிக்சான் டெக்னாலஜிஸ், ஆம்பர் எண்டர் பிரைசஸ், சுப்ரோஸ் ஆகிய நிறுவனங்கள் பயனடையலாம் என்று புளூம்பர்க் எஜென்சிக்கு இந்தியா நிவேஷ் இன்ஸ்டிட்யூஷனல் ஈக்விட்டீஸ் தலைவர் வினய் பண்டிட் தெரிவித்தார்.
3. ஊரக வளர்ச்சி:
வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சித் துறைகள் ஆகியவற்றுக்காக 2.83 ட்ரில்லியன் ரூபாய்கள் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளன. மீன்பிடித்துறையை விரிவாக்கம் செய்ய அரசின் திட்டம் செயல்படவிருப்பதால் சுமார் 500 மீன் இறைச்சி உற்பத்தி அமைப்புகள் உருவாக்கப்படுவதில் அவந்தி ஃபீட்ஸ், அபெக்ஸ் ஃப்ரோசன் ஃபுட்ஸ், மற்றும் வாட்டர்பேஸ் நிறுவனங்கள் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சரக்கு ரயில்கள், குடோன்கள், குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்கு, சரக்கு ரயில்களில் குளிரூட்டப்பட்ட பெட்டிகள் என்று அரசு அறிவித்துள்ளதால கண்டெய்னர் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் நிறுவனம் பெரிய அளவில் பயனடையும். எஃப்.எம்.சி.ஜி நுகர்பொருள் துறையில் இமாமி, இந்துஸ்தான் லீவர், டாபர், டாடா குளோபல் ஆகியவை பயனடைய வாய்ப்புள்ளது.
4. நீர்:
தண்ணீர்ப் பற்றாக்குறை பகுதிகளுக்கான வேளாண் துறை வளர்ச்சிக்காக நிர்மலா சீதாராமன் சில திட்டங்களை அறிவித்துள்ளார். இதனையடுத்து வி.ஏ.டெக் வபாக் லிமிடெட் பயன்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, காரணம் இந்த நிறுவனம்தான் கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்களை வடிவமைக்கு நிறுவனமாகும்.
அதே போல் வறண்ட நிலமுடைய விவசாயிகள் அதில் தங்கள் வாழ்வாதாரத்தைப் பெறுமாறு சோலார் பம்ப்புகள் அமைக்க திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளதால் சக்தி பம்ப்ஸ் இந்தியா லிமிடெட் பங்குகள் ஏற்கெனவே விலையில் ஏற்றம் கண்டுள்ளன.
அதே போல் 2024ம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் தண்ணீர் திட்டத்துக்கு 3.6 ட்ரில்லியன் ரூபாய்கள் நிதி ஒதுக்கீட்டினால் ஜெயின் இரிகேஷன் சிஸ்டம்ஸ், கேஏஸ்பி, கிர்லோஸ்கர் பிரதர்ஸ் லிமிடெட், ஜேகே அக்ரி ஜெனடிக்ஸ் லிமிடெட், பிஐ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்கள் பயனடையும்.
கிளீன் இந்தியா திட்டத்துக்காக 123 பில்லியன் ரூபாய்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐடிசி, புராக்டர் அண்ட் கேம்பிள், கோத்ரெஜ் ஆகியவை பயனடையலாம்.
5. டெலிகாம்:
பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் நிறுவனத்தை மேலும் வளர்க்க அரசு முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் கிராமங்களுக்கும் பிராட் பேண்ட் சேவை திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் அரசு இதற்காக 60 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கியுள்ளது. இதில் ரிலையன்ஸ், ஹெச்.எஃப்.சி.எல். லிட். நிறுவனங்கள் பயனடையும்.
ஆன்லைன் கல்வித்துறை:
கல்வித்துறையில் இந்த பட்ஜெட் சிறப்புக் கவனம் செலுத்தியுள்ளது. 993 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் படி தேசிய தரவரிசையில் 100 இடங்களுக்குள் உள்ள கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் கல்வித்திட்டத்தை வழங்கவிருக்கின்றன. நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்.டி.எஜுகேர் ஆகிய நிறுவனங்கள் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர தகவல் தொழில்நுட்பத்துறையில் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, எச்.சி.எல், டெக் மஹிந்திரா, இவர்களுடன் நடுத்தர ஐடி நிறுவனங்களான எல்.டி.ஐ, மைண்ட் ட்ரீ, பெர்சிஸ்டெண்ட், ஹெக்சாவேர் ஆகியவை பயனடைகின்றன. அதானி நிறுவனமும் இந்த வளர்ச்சிகளினால் பயன்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பைப்லைன் மற்றும் நகர கேஸ் விநியோகஸ்தர்கள்:
இந்தியா தனது தேசிய கேஸ் சப்ளை பரப்பை 16,200 கிமீலிருந்து 27,000 கிமீ பரப்பளவுக்கு விரிவாக்கம் செய்யவுள்ளது. இதனால் பைப்லைன் சப்ளையர்களான வெல்ஸ்பன் கார்ப்பரேஷன், மகாராஷ்டிரா சீம்லெஸ் லிட், ரத்னமணி மெட்டல்ஸ், டியூப்ஸ், ஜிண்டால் சா, ஆகியவை பயனடைகின்றன.
பட்ஜெட்டினால் பயனடையாத துறைகள்:
காப்பீடு:
லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனில் அரசின் பங்குகளில் ஒரு பகுதியை விற்பதான முடிவு தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் பங்குகள் சரிவை ஏற்படுத்தியுள்ளது. 2019-ல் இவர்கள்தான் பெரிய அளவில் வெற்றி கண்டனர், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஹெச்.டி.எஃப்.சி லைஃப் நிறுவனங்களின் பங்குகள், நிப்பான் லைஃப் இந்தியா அசெட்ஸ் மேனேஜ்மெண்ட் லிட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சிக் கண்டன.
பொதுத்துறை வங்கிகள்:
பொதுத்துறை வங்கிகளுக்கு முதலீடு அளிப்பது பற்றி இந்த பட்ஜெட் மவுனம் காக்கிறது. அரசு பொதுத்துறை வங்கிகளில் முதலீடு செய்யாவிட்டால் இது 2014-ம் ஆண்டிலிருந்து முதல் முறையாக இருக்கும்.
இதோடு உர நிறுவனங்கள் துறை, லாஜிஸ்டிக்ஸ் துறைகள், ரியல் எஸ்டேட் துறைகளுக்கு இந்த பட்ஜெட் கடும் ஏமாற்றங்களை அளித்துள்ளது.
-ப்ளூம்பர்க்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT