Published : 01 Feb 2020 05:08 PM
Last Updated : 01 Feb 2020 05:08 PM

வருமான வரி கணக்கீடு; வருகிறது புதிய திட்டம்: 5 லட்சம் வரை வரியும் இல்லை; வரிவிலக்கு சலுகையும் இல்லை

புதுடெல்லி 

மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரியைக் கணக்கிடுவதில் இதுவரை இல்லாத வகையில் புதியமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் கணிசமான அளவு வருமான வரி குறைக்கப்பட்டுள்ளபோதிலும், 80 சி உட்பட வரி விலக்கு சலுகைகள் வழங்கப்படவில்லை.

நாடாளுமன்றத்தில் வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் வருமான வரி கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தற்போது வருமான வரி கணிக்கிடும் முறையிலும் சில மாற்றங்கள் செய்து புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.


புதிய திட்டம்

புதிய திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி இல்லை. அதன் பிறகு கீழ்க்கண்டவாறு வரி வசூலிக்கப்படும்.

* ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு 20% சதவீத வரி வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது 10 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.

* ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருவாய்க்கு 20% வரி வசூலிக்கப்படும் நிலையில், தற்போது 15% வரி மட்டுமே வசூலிக்கப்படும்.

* ரூ.10 லட்சம் முதல் ரூ.12.5 லட்சம் வரையிலான வருவாய்க்கு 30% வரி வசூலிக்கப்படும் நிலையில், தற்போது 20% வரி மட்டுமே வசூலிக்கப்படும்.

* ரூ.12.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான வருவாய்க்கு 30% வரி வசூலிக்கப்படும் நிலையில், தற்போது 25% வரி மட்டுமே வசூலிக்கப்படும்.

* ரூ.15 லட்சத்திற்கு அதிகமான வருவாய்க்கு தற்போதுள்ளபடி 30% வரி தொடரும்.

புதிய திட்டத்தின்படி 5 லட்சம் ரூபாய் வரை வருமான வரி கிடையாது என்ற சலுகை பெறுவதால் 80 சிசி உட்பட எந்த ஒரு வரி விலக்குப் பிரிவும் கணக்கில் கொள்ளப்படாது.

80 சி மற்றும் 80டி பிரிவுகளின் கீழ் தற்போது எல்டிசி, வீட்டு வாடகை, பொழுதுபோக்கு அலவன்ஸ், புரபஷனல் வரி, குடியிருக்கும் வீடு மற்றும் காலி இடங்களுக்கான வீட்டுக் கடன் வட்டி போன்றவற்றைச் செலுத்தும் தொகைகளுக்கு இனிமேல் வருமான வரிச் சலுகை பெற முடியாது.

பழைய திட்டம்

அதேசமயம் வரும் நிதியாண்டிலும் ஒருவர் முந்தைய வருமான வரித் திட்டத்தின்படி கணக்குத் தாக்கல் செய்ய இயலும். அவ்வாறு செய்தால் 2.5 லட்சம் ரூபாய் வரையில் மட்டுமே வருமான வரி விலக்கு உண்டு. அதற்கு மேல் கீழ்க்கண்டவாறு வரி செலுத்த வேண்டும்

* ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 5 சதவீத வரி.

* ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருவாய்க்கு 20% வரி வசூலிக்கப்படும்.

* ரூ.10 லட்சத்திற்கு மேல் 30% வரி வசூலிக்கப்படும்.

வருமான வரி செலுத்தும் ஒருவர் பழைய அல்லது புதிய திட்டம் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அது வரி செலுத்துபவரின் தேர்வுக்கு உட்பட்டது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x