Published : 31 Jan 2020 09:25 PM
Last Updated : 31 Jan 2020 09:25 PM

பொருளாதார ஆய்வறிக்கை: சிறு, குறு தொழில் துறைக்கு ஆதரவு அளிப்பதில் அரசு உறுதியாக உள்ளது

கடன் அளிப்பு, தொழில்நுட்ப மேம்பாடு, EODB மற்றும் சிறு குறு தொழில்களுக்கு சந்தைப்படுத்தல் வசதி, துறையின் வேகமான வளர்ச்சிக்கு முக்கிய சீர்திருத்தங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (MSME) ஆதரவு அளிப்பதில் அரசு உறுதியாக உள்ளது. இந்தியப் பொருளாதாரத்தில் முக்கிய துறையாக அது உள்ளது. குறைவான மூலதன செலவில் தொழில்முனைவோரை உருவாக்கி, வேலைவாய்ப்புகளை அளிக்கும் துறையாக இது உள்ளது.

2019-20 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். நல்ல முறையில் கடன் வசதி கிடைத்தல், தொழில்நுட்பத்தை மேம்படுத்திக் கொள்வது, தொழில் செய்வதை எளிமையாக்குவது மற்றும் சந்தைப்படுத்தல் வசதியை உறுதி செய்வதற்கு குறு, சிறு, நடுத்தர தொழில் துறைக்கு அரசு அளித்து வரும் ஆதரவு நடவடிக்கைகள் இந்த ஆய்வறிக்கையில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

இந்தத் துறையின் வளர்ச்சியை துரிதப்படுத்த பிரதமர் திரு. நரேந்திர மோடி 2018 நவம்பர் 2 ஆம் தேதி முக்கியமான சீர்திருத்தங்களை அறிவித்தார். அந்தத் திட்டங்கள் மற்றும் முன்னேற்றங்கள் விவரம்:

(i) ரூ. 1 கோடி வரையிலான கடன்களுக்கு 59 நிமிடங்களுக்குள் ஆன்லைன் மூலம் கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்படும். இதில் ரூ.49,330 கோடி அளவுக்கு 1,59,422 கடன்கள் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 2019 அக்டோபர் வரையில் ரூ.37,106 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

(ii) ஜிஎஸ்டி பதிவு செய்துள்ள எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கு ரூ.1 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு 2 சதவீத வட்டி தள்ளுபடி அளிக்கப்படும். நவம்பர் 2018 முதல் மார்ச் 2019 வரையிலான காலத்திற்குள் 43 வங்கிகள் / வங்கி அல்லாத நிதி நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு சிட்பி வங்கி ரூ.18 கோடி அளவுக்கு உரிமைகேட்புத் தொகையை அளித்துள்ளது.

(iii) ரூ.500 கோடி வரையிலான விற்றுமுதல் நிலையில் உள்ள அனைத்து நிறுவனங்களும் கட்டாயமாக TReDS தளத்தில் பதிவு செய்திட வேண்டும். இதன் மூலம் வங்கிகளில் கடன் பெறும் வசதி தொழில்முனைவோருக்குக் கிடைக்கும். இதுவரை 329 நிறுவனங்கள் இதில் பதிவு செய்துள்ளன.

(iv)மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் அனைத்தும், தங்களுடைய தேவைகளில் குறைந்தபட்சம் 25 சதவீதம் அளவுக்கு எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும். மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் 59,903 எம்.எஸ்.எம்.இ.க்களிடம் இருந்து ரூ.15,936.39 கோடி அளவுக்குக் கொள்முதல் செய்துள்ளன.

(v) எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களிடம் கட்டாயமாக கொள்முதல் செய்ய வேண்டிய 25 சதவீத அளவில் 3 சதவீதம் பெண் தொழில்முனைவோருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 2019-20ல் 1,471 மகளிர் தொழில்முனைவோரின் எம்.எஸ்.எம்.இ.க்களிடம் இருந்து ரூ.242.12 கோடி அளவுக்குக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

(vi) மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் அனைத்தும் GeM முனையம் மூலமாக கட்டாயமாக கொள்முதல் செய்ய வேண்டும்.இதில் 258 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. மொத்தம் 57.351 எம்.எஸ்.எம்.இ. விற்பனையாளர்கள் மற்றும் சேவையாளர்களும் இதில் பதிவு செய்துள்ளனர்.

(vii) ரூ.6,000 கோடி செலவில் 20 தொழில்நுட்ப மையங்கள் (டி.சி.கள்), 100 விரிவாக்க மையங்கள் (ஈ.சி.கள்) உருவாக்கப்படும். இந்த மையங்களை அமைக்க ரூ.99.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2019-20 ஆம் ஆண்டில் மேலும் 10 விரிவாக்க மையங்கள் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

(viii) மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் தொகுப்பை உருவாக்குவதற்கான செலவில் 70 சதவீதத்தை அரசே ஏற்றுக் கொள்ளும். சோலன், இந்தூர், அவுரங்காபாத், புனே ஆகிய நான்கு மாவட்டங்கள் மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் தொகுப்புகளை உருவாக்கவும், பொது வசதிகளை உருவாக்கவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

(ix) எட்டு தொழிலாளர் நல சட்டங்கள் மற்றும் 10 மத்திய விதிமுறைகளின் கீழான அறிக்கைகளை ஆண்டுக்கு ஒரு முறை தாக்கல் செய்தால் போதும்.

(x) நிறுவனங்களை ஆய்வாளர் ஆய்வு செய்வது கம்ப்யூட்டர் மூலமான தன்னிச்சையான தேர்வு மூலம் முடிவு செய்யப்படும். 3,080 ஆய்வுகள் இதுவரை நடத்தப்பட்டு, அனைத்து ஆய்வு அறிக்கைகளும் Shram Suvidha இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x