Last Updated : 30 Jan, 2020 12:35 PM

 

Published : 30 Jan 2020 12:35 PM
Last Updated : 30 Jan 2020 12:35 PM

மத்திய பட்ஜெட்: எதிர்பார்ப்புகள்; வாய்ப்புகள் என்ன? - பொருளாதார ஆலோசகர் தகவல்

இந்தியப் பொருளாதார சூழல் மந்தமாக இருப்பதால் பொருளாதார நடவடிக்கைகளையும் முதலீடுகளையும் ஊக்குவிக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. பொருளாதார சிக்கல் நிலவி வரும் நிலையில் பிரதமர் மோடியும் பட்ஜெட்டில் கவனம் செலுத்தி வருகிறார். பட்ஜெட் தொடர்பான பணிகளை வெறும் மேற்பார்வையிடாமல் பிரதமர் மோடி நேரடியாக களத்தில் இறங்கி பணிகளைக் கவனித்து வருகிறார்.

சோம.வள்ளியப்பன்

பட்ஜெட் எதிர்பார்ப்பு குறித்து பொருளாதார ஆலோசகர் சோம.வள்ளியப்பன் கூறியதாவது:

‘‘பொருளாதார மந்தநிலையால் உற்பத்தி பாதிக்கப்பட்டு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ள சூழலில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் மக்களுக்கு வேலைவாய்ப்பையும், வருவாயையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

குறிப்பாக கிராமப்புற மக்களுக்கும் நடுத்தர மக்களுக்கும் சலுகைகள் வழங்க வேண்டிய தேவை உள்ளது. இதனால் வருமான வரிச் சலுகைகள் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. பல்வேறு வகையான சேமிப்புகளுக்கு வழங்கப்படும் வருமான வரிச் சலுகைகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

விவசாயப் பொருட்களுக்கு ஆதார விலையை ஒன்றரை மடங்காக அதிகரிப்பதற்கான அறிவிப்புகள் இடம் பெற வேண்டும். விவசாய உற்பத்திய அதிகரிக்கவும், விவசாயிகளின் வருவாயை பெருக்கவும் புதிய திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெறலாம். பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் மூல தன ஆதாய வரி நீக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

பொதுவாக வரி வருவாய் குறைந்துள்ளதால் பட்ஜெட்டில் பெரிய அளவில் வரிச்சலுகைகளை அதிகரிக்கப்பட வாய்ப்பில்லை. வருவாய் குறைந்துள்ள நிலையில் செலவுகளையும் செய்ய வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு உள்ளது. இதனால் மாற்று வழிகளில் நிதி ஆதாரங்களை திரட்ட வேண்டிய கட்டாயம் உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகள் பட்ஜெட்டில் இடம்பெறக்கூடும்.

செல்வந்தர்களுக்கு ஏற்கெனவே வருமான வரி 42 சதவீதம் என்ற அளவில் கட்டும் சூழலில் இதற்கு மேலும் அதனை உயர்த்த முடியாது. சொத்துக்களுக்கு வரி விதிக்கும் நடவடிக்கை இருக்குமோ என்ற அச்சம் உள்ளது.

மொத்தத்தில் இந்த பட்ஜெட் மிக முக்கியமான பட்ஜெட். எதிர்பார்ப்புகள் அதிகம் உள்ள சூழலில் அதனை செய்வதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ள நிலையில் மத்திய அரசு என்ன செய்யும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இவ்வாறு சோம.வள்ளியப்பன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x