மத்திய பட்ஜெட் அச்சிடும் பணி: அல்வா தயாரித்து தொடக்கம்

மத்திய பட்ஜெட் அச்சிடும் பணி: அல்வா தயாரித்து தொடக்கம்
Updated on
1 min read

மத்திய பட்ஜெட் அச்சிடும் பணி தொடங்குவதை குறிப்பிடும் அல்வா தயாரித்து தொடங்கி வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதையடுத்து அவர் பல்வேறு துறை சார்ந்தவர்களுடன் பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

தொழில்துறையினர், வர்த்தகர்கள், தொழிற்சங்கங்கள், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் என தனித்தனியாக அழைத்து ஆலோசனை நடத்தினார். இதுதொடர்பாக பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களும் நடைபெற்றன.

இந்த முறை பட்ஜெட் தொடர்பான பணிகளை மேற்பார்வையிடாமல் பிரதமர் மோடியை நேரடியாக களத்தில் இறங்கி பணிகளைக் கவனித்து வருகிறார்.

பட்ஜெட் ஆலோசனைகள் முடிந்து தற்போது அச்சிடும் பணிகள் தொடங்கியுள்ளன. இதனை தொடங்கும் முன்பாக பாரம்பரியமாக செய்யப்படும் அல்வா தயாரித்து தொடங்கி வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. பட்ஜெட் அறிக்கை அச்சிடுவது ரகசியமாக வைக்கப்படுவது வழக்கம்.

அதன்படி நிதியமைச்சக அலுவலகத்தில் பட்ஜெட் பிரிண்டிங் செய்யும் அலுவலகத்தில் முதல்கட்டமாக அல்வா தயாரிக்கப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் நிதியமைச்சக அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். பின்னர் அல்வா தயாரிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in