Published : 29 Dec 2019 09:16 AM
Last Updated : 29 Dec 2019 09:16 AM

நிறுவனங்களில் நிர்வாகத் திறனை மேம்படுத்தி பொருளாதாரம் உயர வழி ஏற்படுத்துங்கள்: தொழில் துறையினருக்கு ஆர்பிஐ கவர்னர் வேண்டுகோள்

இந்திய தொழில் நிறுவனங்கள் அதன் நிர்வாகத் திறனை மேம்படுத்தினால் அதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் நிதி ஸ்திர அறிக்கையின் முன்னுரையில் அவர் இக்கருத்தை வலியுறுத்தியுள்ளார். நிறுவனங்கள் மட்டுமின்றி வங்கிகளும் பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்ற முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளாதார வளர்ச்சிக்கு இரு முக்கிய காரணிகளான நுகர்வு மற்றும் முதலீடு ஆகிய இரண்டுமே தற்போது சிக்கலான சூழலில் உள்ளன. சர்வதேச நிதிச் சந்தையில் ஏற்பட்டுள்ள தாக்கத்தின் பாதிப்பு இங்கே உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்றார்.

சில தொழில் நிறுவனங்களின் நிறுவனர்கள் தற்போது கட்டுப்பாட்டு அமைப்புகளின் விசாரணை வளையத்துக்குள் வந்துள்ள சூழலில், சக்திகாந்த தாஸ் இக்கருத்தை தெரிவித்திருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.

குறைந்த பணவீக்க விகிதம் இருக்க வேண்டும் என்றே ஆர்பிஐ விரும்புகிறது. அதற்கான நடவடிக்கைகளை கொள்கை முடிவுகளாக எடுக்கிறது. ஆனால் இவற்றை பாதிக்கும் அம்சங்களாக பன்முக வர்த்தகம், சர்வதேச அரசியல் நிகழ்வுகளில் ஸ்திரமற்ற சூழல் ஆகியன சர்வதேச நிதிச் சந்தையின் ஸ்திரத்தன்மையை குலைப்பதோடு இந்தியாவுக்கும் நெருக்குதலை ஏற்படுத்துகிறது என்று தாஸ் குறிப்பிட்டார்.

நிதிக் கொள்கை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரநடவடிக்கைகள் பொருளாதாரவளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்டவை. இவை நிதிச் சந்தை வளர்ச்சிக்கானதல்ல என்று குறிப்பிட்ட அவர், இதுபோன்ற நடவடிக்கைகள் சில சமயங்களில் ஏற்படுத்தும் எதிர்விளைவுகளை (கோப்ரா எஃபெக்ட்) கருத்தில் கொண்டே கவனமாக நிதிக்கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டன என்று தாஸ் குறிப்பிட்டார்.

பொருளாதார வளர்ச்சி சரிவுக்கு உள்நாட்டு நுகர்வு குறைந்தது மற்றும் சர்வதேச சூழல்களே முக்கியக் காரணங்களாகும். நுகர்வோர் கடன் பெறுவது அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த விற்பனை கடனும் அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம் நிதி நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்தி பணப் புழக்கத்தை நிறுத்தியதுதான். இதை மாற்றி தங்களது வர்த்தகத்தை மேம்படுத்த வேண்டும் என்றார்.

ரிசர்வ் வங்கியைப் பொருத்தமட்டில், மிகவும் பொறுப்புடன் வளர்ச்சிக்கு ஏற்ற நிதிக் கொள்கைகளை உருவாக்குகிறது. பிற கட்டுப்பாட்டு அமைப்புகளான செபி, ஐஆர்டிஏஐ ஆகியன சந்தையின் நம்பகத்தன்மையை உருவாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. வளர்ச்சி சரிந்தபோதிலும் நிதி நிலை ஸ்திரமாக உள்ளது. இது மேலும் ஸ்திரமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. வங்கிகளின் வாராக் கடன் அளவு குறைந்து, திரும்பாக் கடன் இழப்புகளும் குறைந்து வருகின்றன.

பொதுத் துறை வங்கிகள் தங்களது நிதி ஆதாரத்தை பெருக்கிக் கொள்வதோடு செயல்பாட்டு இழப்புகளைத் தவிர்க்கநடவடிக்கை எடுக்க வேண்டும்என்றும் அறிக்கை வலியுறுத்திஉள்ளது.

தனியார் வங்கிகளை பொருத்தமட்டில் வங்கி நடைமுறைகளில் சிறந்த நிர்வாகத் திறனை செயல்படுத்துமாறு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (என்பிஎஃப்சி) தங்களது செயல்பாடுகளை மாற்றி சிறப்பான நிர்வாக நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

சர்வதேச அளவில் சூழல் மாறாவிடில் ஏற்றுமதி நிறுவனங்கள் தங்களது நடப்புக் கணக்கை ஸ்திரப்படுத்திக் கொள்ளலாம். அத்துடன் கூடுதலாக மூலதனம் திரட்டுவதற்கான வழிகளையும் ஆராயலாம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x