ரூ.800 கோடி முதலீடு செய்ய கார்பன் மொபைல் திட்டம்

ரூ.800 கோடி முதலீடு செய்ய கார்பன் மொபைல் திட்டம்
Updated on
1 min read

இந்திய செல்போன் உற்பத்தியா ளரான கார்பன் மொபைல் நிறுவனம் அடுத்த மூன்றாண்டுகளில் உற்பத்தி சார்ந்து ரூ.800 கோடி முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. முதலீட்டின் ஒரு பகுதியாக வாட்டர் வேர்ல்டு நிறுவனத்தோடு கூட்டு சேர்ந்து நொய்டா ஆலையின் உற்பத்தித் திறனை 15 லட்சம் யூனிட்டுகளாக அதிகரிக்க உள்ளதாக நிறுவன தலைவர் ஷஷின் தேவசரே கூறியுள்ளார்.

ரூ.450 கோடியில் ஹைதராபாத்தில் ஒரு உற்பத்தி ஆலையைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தேவசரே குறிப்பிட்டார்.

கார்பன் மொபைல் நிறுவனம் ஜெய்னா மார்க்கெட்டிங் மற்றும் யூடிஎல் குரூப் நிறுவனங்களோடு கூட்டு வைத்து தொடங்கப்பட்டது. கடந்த நிதி ஆண்டில் இந்த நிறுவனம் ரூ.4,000 கோடி லாபம் கண்டுள்ளது. 2015 நிதி ஆண்டில் நிறுவனம் ரூ. 5,000 கோடி லாபம் எதிர்பார்த்துள்ளது.

50 சதவீதத்துக்கும் மேலான வருமானம் ஸ்மார்ட்போன்கள் மூலம் வருவதாக தேவசரே குறிப்பிட்டார்.

சந்தையில் உள்ள போட்டி மற்றும் நிறுவனத்தின் எதிர்கால உத்தி குறித்த கேள்விக்கு பதிலளித்த தேவசரே, கார்பன் நிறுவனம் லாபகரமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இது மேலும் வளரும் என்று குறிப்பிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in