

மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கையின் காரணமாக வெங்காயம் விலை குறைந்து வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
வெங்காய உற்பத்தியில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள லாசல்கான் வெங்காய சந்தையில் இருந்து தான் நாடு முழுவதுக்கும் வெங்காயம் அனுப்பப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக கர்நாடக மாநிலத்திலும் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மகாராஷ்டிராவில் பருவம் தவறி மழை பெய்தது. அங்கு தென்மேற்குப் பருவமழை காலத்தில் மட்டுமே மழை பெய்யும். அந்த சமயத்தில் பயிரிடப்பட்ட வெங்காயம் வளர்ந்து சிறிது காலத்தில் அறுவடை செய்யும் நிலையில் இருந்தது. வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில் அரபிக்கடலில் ஏற்பட்ட கியார் மற்றும் மஹா புயல் சின்னத்தால் மகாராஷ்டிராவில் மழை கொட்டித் தீர்த்தது.
பருவம் தவறி கடந்த மாதம் பெய்த இந்த மழையால் அறுவடை செய்யும் நிலையில் இருந்த வெங்காயப் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் வெங்காயம் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. போதிய வெங்காயம் சந்தைக்கு வராத நிலையில் அதன் விலையும் உயர்ந்தது.
நாட்டின் பல நகரங்களிலும் சில்லறை விற்பனையில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகபட்சமாக 120 ரூபாய் வரை விற்பனையானது. வெங்காயத்தைப் பதுக்கி வைத்திருக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளும் உத்தரவிட்டன.
வெங்காயத்தின் விலை சற்று குறைந்து இருந்த நிலையில் தற்போது மீண்டும் வெங்காயம் விலை உயர்ந்தது. சில்லறை விற்பனையில் கிலோ 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனையானது.
வெங்காயத்தின் விலையைக் குறைக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியது. எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெங்காயம் வரத் தொடங்கியுள்ளது.
இந்தநிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுபற்றி கூறுகையில் ‘‘வெங்காயம் விலை உயர்வைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பதுக்கல் செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளோம். இதன் காரணமாக வெங்காயம் விலை குறையத் தொடங்கியுள்ளது. விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும்’’ எனக் கூறினார்.