Published : 08 Dec 2019 09:04 AM
Last Updated : 08 Dec 2019 09:04 AM

ரியல் எஸ்டேட் துறை வெடிக்க காத்திருக்கிறது: முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் கருத்து

புதுடெல்லி

ரியல் எஸ்டேட், கட்டுமானத் துறை, உட்கட்டமைப்பு நிறுவனங்கள் தீவிர நெருக்கடியில் இருக்கின்றன. எப்போது வேண்டுமானலும் அவை பூதாகரமாக வெடிக்கக் கூடும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித் துள்ளார். இத்துறை சார்ந்த நிறு வனங்களுக்கு கடன் அளித்த வங்கி கள், தங்களது நிதி நிலவரத்தை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்தியா அதன் வளர்ச்சி ரீதியாக கடும் மந்தநிலையில் இருக்கிறது. கிராமப்புற வளர்ச்சி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வேலை யின்மை அதிகரித்துள்ளது. முதலீடு களுக்கு ஆதாரமாக விளங்கும், வங்கி சாரா நிதி நிறுவனங்களும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன. இந்நிலை யில் ரிசர்வ் வங்கி, வங்கி சாரா நிதி நிறுவனங்களின் நிதி நிலவரத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 5 சதவீதமாகவும், இரண்டாம் காலாண்டில் 4.5 சதவீதமாகவும் சரிந்து உள்ளது. இது கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிலான சரிவு ஆகும். வேலையின்மை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வருட காலமாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் விற்பனையில் சரிவை சந்தித்து வருகின்றன. பிற துறைகளைக் காட்டிலும் ரியல் எஸ்டேட் துறை கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. அத்துறை யில் பல கோடியிலான முதலீடுகள் முடங்கி உள்ளன. 4.5 லட்சம் கட்டுமானங்கள், குறித்த காலத்தில் முடிக்கப்படாமல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ரியல் எஸ்டேட், கட்டுமானத் துறை, உட்கட்டமைப்பு நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக கடும் அழுத்தத்துக்கு உள்ளாகி இருக்கின்றன. எந்நேரமும் வெடித்துவிடக்கூடிய நிலையில் அத்துறை இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அரசு கவனம் செலுத்த வேண்டும்

தற்போதைய பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ளும் வகையில் மத்திய அரசு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நிறுவனங்களுக்கான நிறுவன வரி 10 சதவீதம் அளவில் குறைக்கப்பட்டது. இந்நிலையில், ‘பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் பொருட்டு தனி நபர் வருமான வரியை மத்திய அரசு குறைக்கக் கூடாது. அவ்வாறு குறைத்தால், அது நாட்டின் நிதி நிலையை பாதிக்கும். பதிலாக, கிராமப்புற வளர்ச்சியில் அரசு கவனம் செலுத்த வேண்டும்’ என்று அவர் கூறினார்.

2025-க்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவது குறித்து மத்திய அரசு தொடர்ந்து உறுதி தெரிவித்து வருகிறது. தற்போதைய நிலையில் ஆண்டுக்கு 9 சதவீத வளர்ச்சி இருந்தால் மட்டுமே 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் சாத்தியப்படும். அதற்கான எந்த வாய்ப்பும் தற்போது இல்லை என்று அவர் தெரிவித்தார்.

தற்போதையை பொருளாதார பிரச்சினையை தீர்க்க வேண்டு மென்றால், மத்திய அரசு முதலில் பிரச்சினையை தெளிவாக அணுக முற்பட வேண்டும். இது தற்காலிகப் பிரச்சினைதான், விரைவில் தானாகவே சரியாகிவிடும் என்ற நம்பிக்கையிலிருந்து வெளிவர வேண்டும். பிரச்சினையை சுட்டிக்காட்டுபவர்களை எதிரிகளாக சித்தரிக்கும் போக்கை கைவிட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x