Published : 28 Nov 2019 08:11 AM
Last Updated : 28 Nov 2019 08:11 AM

ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு தீவிரம்: முதலீட்டாளர்களை ஈர்க்க ரூ.47,000 கோடி கடன் தள்ளுபடி

புதுடெல்லி

ஏர் இந்தியாவை வாங்குபவர் அதற்கு உள்ள ரூ.77 ஆயிரம் கோடி கடனில் ரூ.30 ஆயிரம் கோடி கடனுக்கு மட்டும் பொறுப்பேற்றுக்கொண்டால் போதும் என்ற சலுகையை வழங்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

அரசு விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா கடுமையான நஷ்டத்தில் இயங்கிவருகிறது. அதிக அளவிலான கடன் சுமையால் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. இந்நிலையில் ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. சென்ற ஆண்டே அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது. ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அதிக கடன் சுமை உள்ளதால், எந்த நிறுவனமும் அதை வாங்க முன்வரவில்லை. இந்நிலையில், முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் மத்திய அரசு புதிய திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.77,000 கோடிக்கும் மேலாக கடன்கள் உள்ளன. இந்நிலையில் ஏர் இந்தியாவை வாங்க விருப்பம் தெரிவிக்கும் நிறுவனங்கள் அந்த கடன் தொகையில் ரூ.30,000 கோடிக்கு மட்டும் பொறுப்பேற்றுக் கொண்டால் போதும்; மீதமுள்ள ரூ.47,000 கோடி கடனை அரசு கவனித்துக் கொள்ளும் என்ற சலுகை திட்டம் குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து இந்தியாவை மீட்டெடுக்கும் பொருட்டு கடந்த சில மாதங்களில் மத்திய அரசு சில திட்டங்களை அறிவித்தது. நிறுவனங்களுக்கான நிறுவன வரி 10 சதவீதம் அளவில் குறைக்கப்பட்டது. இதனால் அரசுக்கு ரூ.1.45 லட்சம் கோடி அளவில் வரி இழப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டது. விளைவாக நிதிப் பற்றாக்குறை விகிதம் அரசு எதிர்பார்ப்பதைவிட உயரும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நிதிப்பற்றாக்குறை விகிதத்தை கட்டுக்குள் வைக்க பங்கு விலக்கல் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி உள்ளது. சமீபத்தில் பாரத் பெட்ரோலியம் உட்பட 5 பொதுத் துறை நிறுவனங்களை விற்பதற்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x