Published : 19 Nov 2019 05:56 PM
Last Updated : 19 Nov 2019 05:56 PM
தொலைத் தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய உரிமக் கட்டணங்கள் மற்றும் அலைக்கற்றைப் பயன்பாட்டுத் தொகைகளை உடனடியாகச் செலுத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது முதற்கொண்டே வோடபோன், ஏர்டெல் நிறுவனங்கள் தங்களால் இந்த நிலையில் வர்த்தகத்தைத் தொடர முடியாது என்றும் அரசு நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து புலம்பிக்கொண்டே இருக்கின்றன.
இந்த இரண்டு நிறுவனங்களுமே நாட்டின் பங்குச் சந்தை ஒழுங்கமைப்பு குழுவிடம் தங்களால் மொபைல் டெலிபோன் வர்த்தகத்தில் தங்களால் தொடர முடியக்கூடிய திறனில் குறிப்பிடத்தகுந்த இடர்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். உதாரணமாக பார்தி ஏர்டெல் நிறுவனம் இந்தியப் பங்குச் சந்தையிடத்தில், ‘உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒரு நிச்சயமின்மையை உருவாக்கி விட்டது. எங்களால் இயல்பான வர்த்தக நடைமுறைகளில் எங்கள் சொத்துக்களை பணமாக அடைவதிலும் கடன்கள் மற்றும் பொறுப்புகளை அடைப்பதிலும் சிக்கல்கள் ஏற்படலாம்’ என்று தெரிவித்துள்ளது.
ஆனால் நிறுவனங்களின் இந்த நிலைக்கு உச்ச நீதிமன்ற உத்தரவையோ, அரசையோ குறைகூறிப்பயனில்லை, இந்த நிலைக்கு நிறுவனங்களே முழுக்காரணம். அரசுக்கும் தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களுக்குமான இந்தத் தகராறு நீண்ட காலமாக இருந்து வருகிறது. நீதிமன்றத் தீர்ப்பினால் ஏற்படும் பக்க விளைவுகளிலிருந்து இந்த நிறுவனங்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள போதிய கால அவகாசம் இருந்தது என்றே கூறவேண்டும். அதாவது 15 ஆண்டுகளுக்கு முன்பாகவே உரிமக் கட்டண முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. ஆண்டுக்கு ஒருமுறை செலுத்தினால் போதும் என்று இருந்த கட்டண முறை நிறுவனங்களின் ஆண்டு வருவாயில் இத்தனை சதவீதம் அரசுக்குச் செலுத்த வேண்டும் என்று மாற்றப்பட்டது.
ஆனால் இந்த விஷயத்தில் நீதிமன்றத்தை அணுகி, அது தங்களுக்குச் சாதகமாகவே தீர்ப்பளிக்கும் என்று இந்த நிறுவனங்கள் நம்பியதில் உள்ளது கோளாறு. மேலும் அதிர்ச்சியூட்டக்கூடியது என்னவெனில் இந்த ஒட்டுமொத்த பிரச்சினையிலும் உள்ள அந்தத் தொகை என்பது நிறுவனங்கள் தங்கள் இயல்பான நடைமுறையிலேயே எளிதாகக் கையாளக்கூடிய தொகைதான் என்பதே. நீதிமன்ற வழக்கு ஒருபுறம் நடைபெற்றாலும் ஆண்டுக்கு ஒருமுறை தொகையைச் செலுத்தியிருக்கலாம். அதாவது முதலில் அரசுக்குச் சேர வேண்டிய உரிய தொகையை செலுத்தி விட வேண்டும், பிறகு நீதிமன்ற தீர்ப்பு சாதகமாக வந்தால் அரசிடமிருந்து மீண்டும் அந்தத் தொகையினை திரும்பப் பெற வாய்ப்புள்ளதே.
உதாரணமாக வோடபோன் ஐடியா விவகாரத்தை எடுத்துக் கொள்வோம் இந்த நிறுவனம் இப்பொது செலுத்த வேண்டிய அலைக்கற்றைப் பயன்பாடு மற்றும் உரிமக்கட்டணத் தொகைக்கும் முன்பு அந்த நிறுவனம் செலுத்தி வந்த தொகைக்கும் உள்ள வித்தியாசம் ரூ.11,140 கோடி. இதைச் செலுத்தியிருந்தால் பிரச்சினையில்லை, ஆனால் செலுத்தாததினால் சேர்ந்த வட்டி, அபராதம், அபராதத்தின் மீதான வட்டி ஆகியவை ரூ.44, 150 கோடியாக பூதாகாரமானது. 300% அதிகரித்துள்ளது.
ஆனால் நினைப்பது போல் ரூ11,140 கோடியும் சிறிய தொகை அல்ல என்பது புரிகிறது. ஆனால் 15 ஆண்டுகால தொலைத் தொடர்பு சேவை நடைமுறைகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் தொகையாகும் இது. அதுவும் நிறுவனங்களின் மொத்த ஆண்டு வருவாயை ஒப்பிடும் போது இந்தச் செலவினம் எளிதில் கையாளக்கூடியதுதான். பெரிய சுமையாக இருந்திருக்காது. 2018-19- நிதியாண்டில் கணக்குப் புத்தகங்களின் படி வோடபோன் ஐடியாவின் ஆண்டு மொத்த வருவாய் ரூ.37,000 கோடி. இதில் அரசு கேட்கும் தொகைக்காக ரூ.18,470 கோடியையும் இந்த நிறுவனம் ஒதுக்கியிருந்தது. எனவே அரசுக்குச் சேர வேண்டிய தொகையை செலுத்தக் கூடிய நிலையில்தான் இருந்தது, ஆனாலும் சட்டத்தீர்வை நோக்கிச் சென்றதே இந்த நிறுவனங்களின் தற்போதைய நெருக்கடிக்குக் காரணம்.
பார்தி ஏர்டெல் நிறுவனம் நிதிநிலை ரீதியாக இன்னும் கூட வலுவான நிறுவனமாகும். நிறுவனம் மீது அரசு நிறுவிய தொகை ரூ.6,164 கோடி, ஆனால் செலுத்தாததினால் விளைந்த வட்டி, அபாரதம், அபராத வட்டி என்று ரூ.22, 286 கோடியாக அதிகரித்தது. செலுத்த வேண்டிய இறுதித் தொகை ரூ.28,450 கோடியாக உள்ளது. பார்தி ஏர்டெல்லின் 2018-19 மொத்த ஆண்டு வருவாய் சுமார் ரூ.50,000 கோடி என்றால் அரசுக்குச் செலுதத வேண்டிய தொகை ஒன்றும் பெரிய சுமையல்ல.
நீதிமன்றத்தை நாடிய முடிவு:
தொகையைச் செலுத்தியிருக்கலாம் என்று கூறுவது நிறுவனங்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட நீதிமன்றத்தை நாடக்கூடாது என்பதற்காக அல்ல. மாறாக நீதிமன்ற வழக்கை நம்பி தொகையைச் செலுத்தாமல் சேர்ந்து போன தொகை, வட்டி, அபராதம், அபராதம் மீதான வட்டி என்று பெரிய தொகையாகி விட்டது என்பதே.
அரசுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இந்த மாதிரியான தகராறுகள் ஏற்படும் போது நிறுவனங்கள் நீதிமன்றத்தை நாடுவது என்பது அவர்களிடம் ஊறிப்போன ஒரு அணுகுமுறையாக இருந்து வருகிறது. நாட்டில் வழக்குகள் விசாரணை நடைமுறை, தீர்ப்புகள் அனைத்தும் மிகவும் தாமதமாகவே வெளிவருவதை தங்களுக்குச் சாதகமான தீர்ப்பை எதிர்நோக்கி தாங்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகையினை தாமதப்படுத்துவது நிறுவனங்களின் டி.என்.ஏவின் அங்கமாகி வருகிறது.
பொதுவாக நிறுவனங்களுக்குச் சாதகமாகவே தீர்ப்பு இருக்கும், ஆனால் இந்த விவகாரத்தில் நிறுவனங்கள் இன்னமும் கூட கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் அரசுக்கு லைசென்ஸ் கட்டணமாக, ஸ்பெக்ட்ரம் தொகையாகச் செலுத்த வேண்டியது நிறுவனங்களின் ஆண்டு வருவாயில் சில சதவீதங்களாகும், இதில் ‘வருவாய்’ என்பது எப்படி விளக்கமளிக்கப்பட்டுள்ளது என்பது முக்கியம். கணக்கியல் கோட்பாட்டில் வருவாய் என்பதன் விளக்கத்தை நிறுவனங்கள் நம்பி அதையே அரசு கடைபிடிக்க வேண்டும் என்று கருதுகின்றன. அதாவது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சேவைகள் தொடர்பான வருவாய் மட்டுமே என்பதாக நிறுவனங்கள் புரிந்து வைத்துள்ளன.
மாறாக அரசுக்கும் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் இடையேயான ஒப்பந்தத்தில் அரசுக்குச் சேர வேண்டிய தொகை என்பதில் நிறுவனத்தின் வருவாய் என்பதில் காட்டப்படும் தொகையிலிருந்தே சதவீதக் கணக்கு கையாளப்படும். எனவே கணக்கியல் கோட்பாட்டின் ‘மூலதனம்’ மற்றும் ‘வருவாய்’ போன்ற வேறுபாடுகள் இங்கு தொடர்பற்றவையாகும். எனவே கணக்கியல் கோட்பாடு வருவாய் என்று எதனைக் கூறுகிறதோ, அதற்கும் அரசிற்கும் நிறுவனங்களுக்குமான ஒப்பந்தம் வருவாய் என்று எதனைக் கூறுகிறதோ, இதற்கும் ஆன வேறுபாடுதான் இப்போதைய பிரச்சினையின் முடிச்சு உள்ளது.
எனவே இதில் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் வாதம் வலுவானது என்று வாதிட்டால், அரசு, நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் என்ற வாதமும் வலுவானதே. வருவாயிலிருந்து குறிப்பிட்ட சதவீதம் அரசுக்குச் செலுத்த வேண்டும் என்ற முறைக்குப் பதிலாக ஆண்டுதோறும் ஒரே கட்டணமாக செலுத்தும் முறையை நிறுவனங்கள் விரும்புகின்றன. நிறுவனங்களின் இந்த விருப்பம்தான் தற்போது அதனை சிக்கல்களுக்குள் தள்ளியுள்ளது.
எழுத்தாளர் ஆஸ்கர் வைல்ட் வாழ்க்கையின் இரண்டு துயரங்களைப் பேசுகிறார், “விரும்புவது கிடைக்காமல் போவது பிறகு விரும்பியதே கிடைப்பது” என்றார். அவர் எந்தச் சூழ்நிலைக்கு இதைக் கூறினாரோ தெரியவில்லை, இந்தியத் தொலைத் தொடர்பு நிறுவனங்களை மனதில் வைத்துத்தான் அப்போதே அப்படிக் கூறினாரோ என்று தோன்றுகிறது.
-தி இந்து பிசினஸ் லைன்
கட்டுரை ஆசிரியர்: டி.சம்பத் குமார், பிசினஸ்லைன் முன்னாள் ஆசிரியர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT