Published : 16 Nov 2019 11:26 AM
Last Updated : 16 Nov 2019 11:26 AM

லண்டனில் சொத்து வாங்க இந்தியர்கள் அதிக ஆர்வம்

புதுடெல்லி

லண்டனில் சொத்து வாங்க இந்தியர்கள் அதிக அளவில் ஆர்வம்காட்டுவதாக ஆய்வு ஒன்று தெரிவித்து உள்ளது. இந்தியர்கள் லண்டனில் சொத்துகள் வாங்குவது 2018-19 காலகட்டத்தில் 11 சதவீதம் உயர்ந்து இருப்பதாக நில ஆலோசனை நிறுவனமான நைட் பிராங் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற நாடுகளைக் காட்டிலும் இங்கிலாந்தில் இடம் வாங்குவது பணக்கார இந்தியர்களின் தேர்வாக உள்ளது என்று அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.

நிலம் வாங்குவது தொடர்பாக 20% அளவில் சலுகை வழங்கப்படுவதால், இந்தியர்கள் லண்டனில் அதிக அளவில் வீடு வாங்கி வருகின்றனர். லண்டனில் மேஃபேர், பெல்கிரேவியா, ஹைட்பார்க், மேரிலேபோன் மற்றும் செயின்ட் ஜான்ஸ்வூட் ஆகிய இடங்கள் இந்தியர்களின் தேர்வாக உள்ளன. இந்தியாவில் உள்ள பெரும் பணக்காரர்களில் 21 சதவீதத்தினர், வெளிநாடுகளில் சொத்துகள் வாங்க விரும்புகின்றனர். அதில் 79 சதவீத பேர் இங்கிலாந்தை தேர்வுசெய்கின்றனர். அவர்களில் இளைஞர்களே அதிகம் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.

இந்திய பொருளாதார சந்தை நெருக்கடியை சந்தித்து வருகிறது.

இதனால் இங்கிலாந்து போன்ற நாடுகளின் பாதுகாப்பான பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல் காரணமாக இந்தியர்கள் அங்கு முதலீடு செய்ய விரும்புவதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x